Kalaimamani award case:கலைமாமணி விருது வழங்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
2021-ல் தகுதி இல்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக கலை மற்றும் பண்பாடு துறை மூலமாக இளைஞர்களுக்கு இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைகள், ஓவியம் மற்றும் சிற்பக்கலை கற்பிக்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. கலைமாமணி விருது 5 பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 முதல் 35 வயது வரை "கலை வளர்மதி" விருதும், 36 முதல் 50 வயது வரை "கலை சுடர்மணி" விருதும், 51 முதல் 60 வயது வரை "கலை நன்மணி" விருதும், 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு "கலை முதுமணி" விருதும் வழங்கப்படுகிறது.
கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, எந்தவித தகுதியோ, எந்தவித நெறிமுறையோ இன்று வரை வகுக்கப்படவில்லை. 2019-2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20.02.2021 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. இதில் தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் வழங்கிய சான்றிதழில் உறுப்பினர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் அவசரக் கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெற வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது 2021-ல் வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், 2019 - 2020ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கினை ஒத்தி வைத்தனர்.
டாபிக்ஸ்