போதையில் லாரி டிரைவர்கள்...உரிமையாளருக்கு அபராதம்! பஞ்சாயத்தில் இறங்கிய டிஎஸ்பி
Salem Drunken Drive: குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவர்கள் பற்ற தகவல் தெரிவித்த உரிமையாளரை போலீசார் அபராதம் கட்ட சொல்ல ஆவணங்களை பறித்து வைத்த சம்பவம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கையை எடுத்து லாரி உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (35). இவருக்கு சொந்தமான லாரியில் டெல்லியில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு வந்து கொண்டிருந்தது. ஐந்து நாள்களில் வரவேண்டிய இந்த லாரி 11 நாள்கள் ஆகியும் வராததால் லாரியில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் உரிமையாளர் கணேஷ்குமார் சோதனை செய்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அப்போது அந்த லாரி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் நின்று செல்வதை கவனித்துள்ளார். பின்னர் லாரி டிரைவர்களிடம் வரவேண்டிய இடம் பற்றி பேசியபோது அவர்கள் சரியாக பதில் அளிக்காமல் மது அருந்தியவாறே வாகனம் ஓட்டி வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த 28ஆம் தேதி இந்த லாரி தருமபுரி மாவட்ட எல்லையில் இருப்பதை அறிந்த கணேஷ்குமார் தொப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் சேலம் மாவட்ட எல்லைக்குள் லாரி சென்று விட்ட நிலையில், அங்குள்ள தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த லாரி கண்டறியப்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பின்னப் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக லாரி ஓட்டுநர் மற்றும் லாரி தொடர்பான ஆவணங்களை போலீசார் பறித்தனர்.
இந்த நிகழ்வுக்கு பின்னர் லாரி உரிமையாளர் கணேஷ்குமார் போலீசிடம் வந்து லாரியின் ஆவணங்களை கேட்டுள்ளனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்த டிரைவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டதால், வழக்கின் அபராத தொகையை நீதிமன்றத்தில் கட்டிவிட்டு ஆவணத்தை பெற்று செல்லுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லாரி உரிமையாளர் கணேஷ்குமார், லாரி டிரைவர்கள் மீதான அபராதத்தை தான் எப்படி செலுத்த முடியும் என்று கூறியுள்ளார். இதற்கு டிரைவர்கள் பிடித்து ஒப்படைக்குமாறு போலீசார் கூறியுள்ளதாக தெரிகிறது.
அத்துடன் டிரைவர் போதையில் வாகனம் ஓட்டினால் உரிமையாளர்தான் அபராதம் கட்ட வேண்டும் எனவும், சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை அணுகி விளக்கம் கேட்டுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணேஷ்குமார், லாரி உரிமையாளர்கள் சிலரை திரட்டி ஓமலூர் நீதிமன்றம் முன் குவிந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த டிஎஸ்பி சங்கீதா, உடனடியாக காவல் ஆய்வாளரிடம் விசாரிக்குமாறு அறிவுறுத்தினார்.
விசாரணைக்கு பின்னர் டிஎஸ்பி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அனைத்து வாகனங்களும் லாரி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே மாற்று டிரைவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பஞ்சு லோடுடன் இருந்த லாரி ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது உரிய நேரத்தில் ரூ. 10 ஆயிரம் அபராத தொகையை கட்டுமாறு போலீசார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.