தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vaiko: "எம்.பி. சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலையா? - கண்ணீர் மல்க உருக்கமாக சொன்ன வைகோ!

Vaiko: "எம்.பி. சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலையா? - கண்ணீர் மல்க உருக்கமாக சொன்ன வைகோ!

Karthikeyan S HT Tamil
Mar 28, 2024 11:48 AM IST

Vaiko vs Ganeshamurthi: "எம்.பி சீட் கிடைக்காததால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதில் ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லை." என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்ணீர் மல்க உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

வைகோ
வைகோ

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை விமான நிலையத்தில் வைகோ அளித்த பேட்டி இதோ.. "வாழ்நாள் முழுவதும் லட்சியங்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் ஈரோடு கணேசமூர்த்தி. மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கணேச மூர்த்தி துணிச்சலானவர், மன உறுதி கொண்டவர். அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. இந்த முறை சீட் ஒதுக்கீடு பற்றி நான் அவரிடம்.."சட்டமன்ற தேர்தல் வருகிறது. அதில் உங்களுக்கு விருப்பமான வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதியில் நீங்கள் நின்றுகொள்ளலாம்." என்று சொன்னேன். அதற்கு, “அதை பற்றி ஒன்றும் இல்லை. திமுக இரண்டு சீட் ஒதுக்கினால் எனக்கு வாய்ப்பளியுங்கள். ஒரு சீட் கொடுத்தால் துரை வைகோ நிற்கட்டும்.” என்று தான் கணேசமூர்த்தி சொன்னார்.

துரை வைகோ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுகூட என் வீட்டுக்கு பலமுறை வந்தார். நானும் பலமுறை டெல்லியில் உள்ள அவர் வீட்டுக்கு சென்றுள்ளேன். நாங்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழகி வந்துள்ளோம். கொள்கை லட்சியம் தான் பெரிது என்று வாழ்ந்தவர் கணேசமூர்த்தி. 

ஆனால், சமீப காலமாக அவர் ஒரு மனஅழுத்தத்தில் இருப்பதாக ஈரோடு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கணேசமூர்த்தியின் மகனும் சொன்னார்கள். எம்.பி சீட் விவகாரத்தை பொறுத்தவரை கணேசமூர்த்தி மகிழ்ச்சியாகவே தான் இருந்தார். துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கூட என்னிடம் பேசினார்.

இருதய சிகிச்சைக்காக நான் தான் முதலில் கணேசமூர்த்தியை டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். அதன்பின் மூன்று மாதத்துக்கு ஒருமுறை வந்து மருத்துவரை பார்த்துவிட்டு என்னையும் பார்த்துவிட்டு செல்வார். அவர் இப்படி ஒரு முடிவுக்கு வருவார் என்று நான் கனவிலும் நினைத்து பார்த்து இல்லை. இடி தலையில் விழுந்ததுபோல் உள்ளது. விவசாயிகளுக்காக கடுமையாக போராடியவர். 

மக்கள் நலனே தன்னுடைய கடமை என்று வாழ்ந்த கணேசமூர்த்தி இப்படி ஒரு முடிவெடுப்பார் என்று நான் நினைக்கவேயில்லை. அவர் மருந்து குடித்துவிட்டார் என்று சொன்னபோதே என் உயிரெல்லாம் போய்விட்டது. மிகவும் துணிச்சல், மன உறுதி வாய்ந்தவர் அவர் இப்படி செய்ததில் துயரம் தான். எம்.பி சீட் கிடைக்காததால் தான் வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்வதில் ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லை. ஈரோட்டில் இருக்கும் மாவட்ட செயலாளர்களை கேட்டால் உண்மை தெரியும். இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய கணேசமூர்த்தி இப்படி எங்களை நட்டாற்றில் விட்டு விட்டு போய்விட்டார். அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை விட, மருந்து குடித்து விட்டார் என்ற செய்தியே எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது" என்று வைகோ கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்