Illegal relationship: மனைவியை கொன்று கள்ள காதலியுடன் தப்பிய நபர் கைது
கள்ள உறவால் மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற நபரை, அவரது காதலியுடன் வேடசந்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பூத்தாம்பட்டியை சேர்ந்த பந்தல் போடும் தொழிலாளி ராஜசேகர்(40). இவருக்கும் குஜிலியம்பாறை தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள அரண்மனையூரை சேர்ந்த தேவி(32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதையடுத்து ராஜசேகருக்கு ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த சரோஜாதேவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த தேவி ராஜசேகரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடமதுரை மகளிர் போலீசில் தேவி புகார் செய்தார். அப்போது போலீசார் ராஜசேகரை கண்டித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதன்பின்னர் ராஜசேகர் - தேவி ஆகியோர் பூத்தாம்பட்டியில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 2 மாதத்துக்கு முன்னர் இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த இருநாள்களுக்கு முன்னர் தேவி தனது 3 மகன்களை அழைத்து கொண்டு அரண்மனையூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து அரண்மனையூருக்கு வந்த ராஜசேகர், தேவியின் வீட்டில் தங்கியுள்ளார். பின் மறுநாள் காலை தேவியின் தாய் வேலைக்கு சென்று விட்ட நிலையில், ராஜசேகர், தேவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ராஜசேகர் தேவியின் தலையை பிடித்து ஜன்னல் கம்பியில் மோதி கீழே தள்ளி, வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். அதன் பின்னர் ராஜசேகர் தனது மகன்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து பூத்தாம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டு விட்டு, கள்ளக் காதலி சரோஜாதேவியுடன் திருச்சிக்கு தப்பி சென்றுள்ளார்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தேவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜ சேகரை தேடி வந்தனர்.
பின்னர் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி உத்தரவின் பேரில் வடமதுரை காவல் ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் ராஜசேகரை தேடினர்.
திருச்சியில் இருந்தவாறே ராஜசேகர் தன்னுடைய நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து என்ன நடக்கிறது என்பதை ராஜசேகர் தெரிந்து கொண்டார். அவரது தொலைபேசி உரையாடலை நோட்டமிட்ட வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான தனிப்படை போலீசார், ராஜசேகர் திருச்சியில் இருப்பது உறுதி செய்து சமயபுரம் அருகே அவரை கைது செய்தனர். ராஜசேகருடன் அவரது கள்ளக்காதலி சரோஜா தேவியும் கைதி செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ராஜசேகர் கூறியதாவது:" தனக்கும் ரெட்டியார்சத்திரம் அருகே கே. புதுக்கோட்டையை சேர்ந்த சரோஜா தேவி என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரோஜா தேவி கணவர் இறந்து விட்டதால் அவரது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். நாங்கள் இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தது எனது மனைவிக்கு தெரியவந்தது.
இதனை வைத்து என் மனைவி தினேஷ் என்பவருடன் பழக்கத்தில் இருந்தார். இதை நான் தட்டிக்கேட்டதால் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். சம்பவதன்று தினேஷுடன் தேவி பேசியது தொடர்பான ஆதாரத்தை காட்டி கேட்டபோது, என்னை அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில் அவரை கத்தியால் கழுத்தை அறுத்து வீட்டை பூட்டிவிட்டு சென்றேன். போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் மகன்களை தாயிடம் விட்டு, சரோஜா தேவியுடன் திருச்சிக்கு வந்தேன்.
எனது நண்பரிடம் பணம் பெறுவதற்காக போனை சுவிட்ச் ஆன் செய்தேன். அப்போது எனது இருப்பிடத்தை கண்டறிந்துவிட்டனர். கொலை செய்த குற்ற உணர்ச்சி காரணமாக சமயபுரம் கோயிலுக்கு சென்ற சாமி கும்பிட முடிவு செய்தேன். ஆனால் அதற்குள் போலீசார் என்னையும், சரோஜா தேவியையும் பிடித்து விட்டனர்" என்றார்
அதேபோல், என்னுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் முதலில் உன் மனைவியை கொலை செய்துவிட்டு வா என்று ராஜசேகர் சென்னதை கேட்டே அவர் மனைவியை கொலை செய்ததாக சரோஜா தேவி ஒப்புக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் ராஜசேகர், சரோஜா தேவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ராஜசேகர் திண்டுக்கல் சிறையிலும், சரோஜா தேவி மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
டாபிக்ஸ்