கோவில் மற்றும் தனியார் யானைகள் குறித்த வனத்துறை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு
Court Judgement: கோவில் யானைகளை மறுவாழ்வு முகாம் அனுப்புவது குறித்து வனத்துறை ஆலோசிக்க வேண்டும் என்றும் கோவில்கள் மற்றும் தனியார் யானைகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சேக்முகமதுவுக்குச் சொந்தமானது 56 வயதான லலிதா என்ற பெண் யானை உள்ளது. இந்த யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி யானையை பாகனிடமிருந்து பிரித்து அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும், யானை தொடர்ந்து பாகனின் பராமரிப்பிலேயே இருக்கட்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் கோவில் விழா ஒன்றுக்கு யானை அழைத்துச் செல்லப்பட்டபோது காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், "லலிதா யானைக்கு உரிமை கோரிய வழக்கில் யானையை அவரிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என்றும், யானையை முறையாக பராமரித்து அது தொடர்பான அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்புமாறும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.
யானை பராமரிப்பு குறித்து அறிக்கை அளிக்கப்பட்ட நிலையிலும், யானைக்கு காயம் ஏற்பட்டது தொடர்பாக அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மருத்துவர் கலைவாணனை, லலிதா யானை பராமரிப்பிற்கான சிறப்பு பணிக்காக ஒதுக்க வேண்டும். யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர் கலைவாணன் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முறையான மருத்துவமும், உணவும் யானைக்கு வழங்கப்பட வேண்டும். லலிதா யானைக்கு 60 வயது இருக்கக்கூடும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களில் உணவும், பராமரிப்பு வழங்கி ஓய்வு எடுக்க செய்ய வேண்டும்.
லலிதா யானையை எவ்விதமான வேலைகளிலும் ஈடுபடுத்தக் கூடாது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் இனிவரும் நாட்களில் எந்த யானையும் வளர்க்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது பல இடங்களில் யானைக்கு முறையான வசதிகள் செய்து தரப்படுவது இல்லை. பாகன்கள் குடித்துவிட்டு யானையை துன்புறுத்தும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இதன் காரணமாக சில சமயங்களில் ஆக்ரோஷமாக மாறி பாகன்களை தாக்கும் சூழல் ஏற்படுகிறது.
எனவே சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் அனைத்து கோவில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் எவ்விதமான யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரம். எனவே அது தொடர்பாக ஆலோசித்து அதன் அடிப்படையில் அனைத்து கோவில்களுக்கும் உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும்.
எல்சா பவுண்டேஷன், தரப்பில் திருப்பத்தூர் மாவட்டம், சேலம் மாவட்டம் ஆகியவை யானைகள் மறுவாழ்வு முகாம் அமைப்பதற்கு தகுந்த இடங்களாக உள்ளன என குறிப்பிட்டு இருக்கிறார். திருச்சி எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாம் அமைக்க உகந்த இடம் இல்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். எனவே இது தொடர்பாகவும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருக்கிறார்.
டாபிக்ஸ்