EVKS: ’என் பொது வாழ்வில் இந்த 3 பேருக்கு கடமைப்பட்டுள்ளேன்’ ஈவிகேஎஸ் உருக்கம்
இந்த தெருவுக்கு என் மகன் திருமகன் பெயரை வைக்க காரணமாக இருந்த ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு மாநகரில் உள்ள கச்சேரி வீதிக்கு மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சியில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், என்னுடைய பொதுவாழ்வில் நான் மூன்று பேருக்கு கடமைப்பட்டுள்ளேன். ஆருயிர் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தியாகத் தலைவி சோனியகாந்தி, தளபதி ஸ்டாலின் ஆகியோருக்கு கடமைப்பட்டுள்ளேன். இந்த மூன்றுபேரையும் என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்.
இந்த தெருவுக்கு என் மகன் திருமகன் பெயரை வைக்க காரணமாக இருந்த ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரோட்டை பொறுத்தவரையில் இந்த பகுதியில் பால் உற்பத்தியில் பெருமைகளை சேர்ந்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கே.பரமசிவம். அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் சித்தோடு பால்பண்ணையில் அவரின் சிலையை வைக்க அமைச்சர் முத்துசாமியை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் காந்தி உடன் தீண்டாமையை ஒழிக்க பாடுபட்ட லக்ஷ்மண ஐயருக்கு கோபியில் சிலை வைக்க அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைக்கிறேன்.
கோபியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு செல்லும் நிலையில்தான் உள்ளாரே ஒழிய உருப்படியாக எதுவும் செய்யவில்லை.
40 ஆண்டுகளாக அமைச்சர் முத்துசாமியை அறிவேன். அவர் ஈரோடு மாவட்டத்திற்கு செய்த காரியங்களை இதுவரை யாரும் செய்தது இல்லை என்று கூறினார்.
கர்நாடக தேர்தல் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு, கர்நாடக தேர்தல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அங்கு விரைவில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என தெரிவித்தார்.