Murder Case: மனைவியின் காதலனுக்கு வெட்டு - ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம்!
கைக்குழந்தையோடு மனைவி தனது காதலனுடன் வாழ்ந்து வந்ததால் காதலனை கணவர் வெட்டி கொலை செய்துள்ளார்.
செங்குன்றம் புழல் அருகே விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சுதாசந்தர் (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராகிணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது தெரிந்த ராகிணியின் வீட்டார் சுதாசந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனை அடுத்து உடனே பெண் வீட்டார் அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்ற இளைஞருக்கு ராகிணியை திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது ராகிணிக்கு ஒரு குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு பிறகு ராகிணியின் காதல் விவகாரம் குறித்து அவரது கணவர் வசந்துக்கு தெரிய வந்துள்ளது. இதனால் ராகிணியின் மீது சந்தேகப்பட்டு அந்த குழந்தையின் பிறப்பு குறித்து அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.
இதனால் மனம் உடைந்த ராகிணி தனது காதலன் சுதாசந்தருடன் சென்று விட்டார். அவருடன் போகும்போது கை குழந்தையையும் தூக்கி சென்றுள்ளார். பின்னர் இதுதொடர்பாக ராகிணிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அப்போது ராகிணி, வசந்துடன் வாழ எனக்கு விருப்பமில்லை நான் எனது காதலுடன் சென்று விடுகிறேன் என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் ராகிணியும் அவரது காதலர் சுதாசந்தரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த நிலையில் கணவர் வசந்த் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு புழல் கல்பாளையம் அருகே சுதாசந்தரும், ராகிணியும் பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத கும்பல் ஆட்டோவில் வந்து இவர்களை வழிமறித்து கீழே தள்ளி உள்ளனர்.
அதன் பின்னர் சுதாசந்தரை சுற்றி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். அவரை கொலை செய்த அந்த அடையாளம் தெரியாத கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராகிணியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எனது கணவரும், குடும்பத்தினரும் சேர்ந்து எனது காதலனை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் விசாரணையில்," ராகிணி கை குழந்தையுடன் காதலனோடு வாழ்ந்து வந்தது அவரது குடும்பத்தாருக்கும், கணவர் வசந்துக்கும் கௌரவ பிரச்னையாக இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வசந்த் தனது மாமியார் வீட்டாருடன் சேர்ந்து சுதாசந்தரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதனால் சுதாசந்தரும், ராகிணியும் வெளியே செல்லும் இடங்களை கண்காணித்து நேற்று இரவு பின்தொடர்ந்து சுதாசந்தரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்” என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து ராகிணி, கணவர் வசந்த், தாய், அண்ணன் மற்றும் உறவினர்கள் உட்பட ஐந்து பேர் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் குற்றவாளிகளாக கூறப்படும் அந்த ஐந்து பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.