தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vande Bharat: ’பிடிஆருக்கு கேக் ஊட்டிய தமிழிசை!’ மதுரையில் பாசமழை! எல்லா வந்தே பாரத் வந்த நேரம்…!

Vande Bharat: ’பிடிஆருக்கு கேக் ஊட்டிய தமிழிசை!’ மதுரையில் பாசமழை! எல்லா வந்தே பாரத் வந்த நேரம்…!

Kathiravan V HT Tamil
Sep 24, 2023 05:12 PM IST

”கருத்தியலில் எதிரும் புதிருமாக உள்ள இருதரப்பினரும் மாறி மாறி கேக் கூட்டிக் கொண்ட சம்பவம் அரசியல் நாகரிகத்திற்கு அடையாளமாக மாறி உள்ளது”

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக் ஊட்டும் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன்
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக் ஊட்டும் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை - திருநெல்வேலி வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் உதய்பூர்-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை, பாட்னா-ஹவுரா, காசர்கோடு - திருவனந்தபுரம், ரூர்கேலா-புரி, ராஞ்சி-ஹவுரா மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய 9 வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.

திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் 7 மணிநேரம் 50 நிமிடங்களில் 652 கி.மீ தூரத்தை கடந்து சென்னையை மதியம் 1:50 மணிக்கு சென்றடைகிறது. இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு நெல்லைக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வேவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கலந்து கொண்டதுடன் வந்தே பாரத் ரயிலிலும் ஏறி பயணம் செய்தார். மதுரைக்கு வந்த வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏவும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வந்தே பாரத் ரயில் வடிவில் செய்யப்பட்ட கேக்கை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி ஆகியோர் சேர்ந்து வெட்டினார். கேக் துண்டை எடுத்த தமிழிசை சவுந்தராஜன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டினார். பாஜக தொண்டர்கள் தொண்டர்கள் ‘பாரத் மாதா கி ஜெ’என கோஷமிட்டனர். அப்போது குறுக்கிட்ட தமிழிசை ‘வந்தே பாரத்! வந்தே மாதரம்’ என கோஷமிட சொன்னார்.

தொலைக்காட்சி விவாதங்களில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் பாஜக பொதுச்செயலாளரான பேராசியர் சீனிவாசன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கேக்கை ஊட்டிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சமீபகாலமாக திமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக பல்வேறு பேட்டிகளை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கொடுத்து வருகிறார். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் நாடாளுமன்றம் தொடங்கி நாடு முழுவதும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் மாறி மாற்றி பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நடந்த கேக் ஊட்டிய சம்பவம் அரசியல் நாகரிகத்திற்கு அடையாளமாக மாறி உள்ளது. 

IPL_Entry_Point