Erode: "தேர்தல், கும்மியாட்டம் எதுவானலும் எங்கள் அண்ணன் எஸ்.பி.வேலுமணி கில்லி"
Erode by-election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஒயிலாட்டம் ஆடி அக்கட்சியின் எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக காட்சிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆளும் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திமுக கூட்டணி வேட்பாளராக களம் காண்கிறார்.
தேமுதிக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகளும் கோதாவில் குதித்துள்ளன.
அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்து வருகிறது. திமுக கூட்டணி வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு ஆதரவாக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்தார்.
அவருக்கு ஆதரவாக அதிமுகவின் முக்கிய பிரமுகர்களும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒயிலாட்டம் ஆடியபடியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு வீரப்பன்சத்திரம் பகுதிக்குட்பட்ட ஜான்சி நகரில் கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்தார்.
ஈரோட்டில் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம் சுகுணாபுரம் அருவி ஒயிலாட்ட குழு சார்பில் வீரப்பன்சத்திரம் பகுதிக்கு உட்பட்ட ஜான்சி நகரில் ஆசான் எஸ்.சி.செல்வராஜ் மேற்பார்வையில் அருவி ஒயிலாட்ட குழுவினர் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்தனர்.
அந்தப் பகுதிக்கு வந்த எஸபி.வேலுமணி சுகுணாபுரம் அருவி ஒயிலாட்ட குழுவினருடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடியது குறிப்பிடத்தக்கது.
இதை காண அப்பகுதி மக்கள் பெருந்திரளாக அங்கு கூடினர். எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக அதிமுக மதுரை மண்டல ஐ.டி. பிரிவு செயலர் ராஜ் சத்யன், எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், "மக்களை அடிமாடு போன்று ஏற்றி சென்று அடிமைப்படுத்தி வாக்கு கேட்கவில்லை, மக்களோடு மக்களாக ஆடி பாடி, அல்லும் பகலும் உங்களுக்கு உழைப்போம் என உறுதி கூறி வாக்கு கேட்கிறோம்! தேர்தல்,கும்மியாட்டம்,கிரிக்கெட் என எதுவானலும் எங்கள் அண்ணன் எஸ்.பி.வேலுமணி கில்லிதான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் 27ஆம் தேதி இடைத்தேரதல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.