EB dead : மின் கம்பத்தில் ஏறிய மின் ஊழியருக்கு சொந்த ஊரிலேயே இந்த கதியா?
துறையூர் அருகே மின் ஊழியர் தனது சொந்த கிராமத்தில் மின் கம்பத்தில் ஏறி பணியில் மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் குமணன் (46), இவர் கடந்த 2011ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன்மேனாக வேலைக்குச் சேர்ந்தார். பின் மின் வாரிய துறையூர் பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள செல்வராஜ் என்பவரின் விவசாய தோட்டத்திற்கு புதிய மின் இணைப்பு தேவைப்பட்டது. அதற்காக அவர் மின் வாரியத்திடம் பதிவு செய்திருந்தார். இதையடுத்து புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக குமணன் உள்ளிட்ட மின்வாரிய பணியாளர்கள் அங்கு சென்று மின் இணைப்பை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மின் கம்பத்தில் ஏணியை நிறுத்தி, அதன்மீது ஏறி நின்று, அதற்கு சில அடி உயரத்தில் மரக்குச்சியை கட்டி, அதில் நின்றபடி மின்கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்கும் பணியில் குமணன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாரத வகையில், திடீரென மின்சாரம் பாய்ந்ததில் குமணன் உயிரிழந்து, மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த மரக்குச்சியிலேயே தொங்கிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் மின் வினியோகத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அப்பகுதி மக்களின் உதவியுடன் குமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த திருச்சி மண்டல மின் வாரிய அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் துறையூர் பிரிவு உதவி மின் பொறியாளர் ரவிச்சந்திரன் இதுதொடர்பாக துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மின் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரம்பூரைச் சேர்ந்த மின் ஊழியரான குமணன், தனது சொந்த கிராமத்திலேயே பணியின்போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, மின்சாரம் தொடர்புடைய பணிகளில் ஈடுபடக்கூடிய மின்வாரிய ஊழியர்கள் அனைவரும், தாங்கள் பணிபுரியும் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதி செய்தபிறகே, அங்கு பணியில் ஈடுபட வேண்டும் எனவும், பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும் எனவும் ஊழியர்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
டாபிக்ஸ்