இப்படியெல்லாம் கூடவா கடத்துவீங்க? கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த பயணி
திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செருப்புக்குள் வைத்து கடத்த முயன்ற ரூ.7.73 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறையினர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் வழியாக தங்கம் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வரக்கூடிய பயணிகள், அவர்கள் கொண்டு வரக்கூடிய உடந்தைகள் தீவிர சோதனைகளுக்குப்பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் திருச்சியிலிருந்து சிங்கப்பூர் புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணி அணிந்திருந்த செருப்பு மீது கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. செருப்பை கழட்டி கையில் எடுத்து பார்த்தபோது இயல்பாகவே இருந்தது. ஆனால், அதன் மேல் பகுதியில் பாதத்தை வைக்கக்கூடிய தோல் சற்று தடிமனாக இருந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அதை கிழித்துப்பார்த்தனர். அப்போது அந்த செருப்புக்குள் கட்டுக்கட்டாக ரூ. 7 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டு, அதை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கரன்சிகளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் அவற்றை கடததிச்சென்ற பயணிகளை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல நேற்றுமுன்தினம் மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த 9.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. அதே நாளில் திருச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு கடத்திச் செல்ல முயன்ற 7.41 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்