Couple Death: வாழ்வில் மட்டுமல்ல சாவிலும் சேர்ந்தே பயணம் - சோகத்தில் உறவினர்கள்
சுவாமிமலை அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாபமாக இறந்தார். இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (85). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரோஜா (75). இவர்களுக்கு இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்கள். கடந்த சில நாட்களாக கலியமூர்த்தி, உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் கலியமூர்த்தி, உடல்நலக்குறைவால் இறந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கணவர் இறந்த தகவல் அறிந்ததும் சரோஜா செய்வதறியாது திகைத்தார். இத்தனை ஆண்டுகளாக தன்னோடு பயணித்தவர் தன்னை விட்டு விட்டு போய்விட்டாரே. இனிமேல் தனக்கு யார் ஆதரவு? என்று சரோஜா மனம் வெதும்பினார். கணவர் இறந்த நிமிடத்தில் இருந்து சரோஜா பித்து பிடித்ததுபோல் ஆனார்.
இந்நிலையில் கலியமூர்த்தியின் இறுதிச் சடங்குகளுக்கான வேலைகள் நடந்து கொண்டு இருந்தது. அப்போது சரோஜா தனது கணவரின் அருகில் சென்ற அவரது உடலை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். அப்போது அவர் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அங்கு இருந்த அவர்களின் உறவினர்கள் சரோஜா முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவர் கடைசி வரை எழுந்திருக்கவில்லை. தனது கணவர் சென்ற இடத்துக்கே அவரும் சென்றது தெரியவந்தது.
கலியமூர்த்தியின் இறப்புக்கு துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அவரது மனைவியும் இறந்துவிட்டதை அறிந்து இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.
இதனையடுத்து கணவன்-மனைவி இருவரது உடல்களையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய முடிவெடுத்த உறவினர்கள் அதன்படி இருவரது உடல்களையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர். கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்து சாவிலும் இணைபிரியாமல் இந்த தம்பதி ஒன்றிணைந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெருத்த சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
டாபிக்ஸ்