TN Assembly 2024: ’தென் இந்தியா மீது தொங்கும் கத்தி!’ பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த ஸ்டாலின்!
”TN Assembly 2024: ’1971ஆம் ஆண்டு தமிழ்நாடும், பீகாரும் ஒரே அளவிலான மக்கள் தொகையை பெற்றிருந்ததால் மக்களவையில் திட்டதிட்ட ஒரே அளவிளான தொகுதி எண்ணிக்கையை கொண்டிருந்தன. தற்போது தமிழ்நாட்டை விட பீகாரின் மக்கள் தொகை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது”

ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுவரைகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் சட்டப்பேரவையில் தினமும் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிக மோசமான எதேச்சதிகார எண்ணம் ஆகும். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதியை முறியடிக்க வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியம் அற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் அரசியல் சட்டவிரோதம் ஆனது.