Trichy : தெருவுக்குத் தெரு மதுக்கடைகள்.. ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துக-அன்புமணி
அரசு மதுக்கடையில் மது வாங்கிக் குடித்த இருவர் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி லால்குடி அடுத்துள்ள தச்சங்குறிச்சி மாரியம்மன் கோயில் கிழக்கு தெரு பகுதியில் வசித்து வந்தவர் முனியாண்டி (60). அதே பகுதியில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி சிவக்குமார்(48). எப்போதும் இருவரும் சேர்ந்தே மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் அங்கே தச்சங்குறிச்சியில் இயங்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கி இருவரும் குடித்துள்ளனர். மது குடித்த சில மணி நேரத்தில் மாலை நேரத்தில் முனியாண்டிக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சைக்கு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆனால் முனியாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். சிவகுமாரும் குடிபோதையில் உணவு எதையும் சாப்பிடாமலேயே வீட்டில் படுத்துத் தூங்கியுள்ளார்.இதற்கிடையே அவரது வீட்டில் உள்ளவர்கள் காலை அவரை எழுப்ப முயன்ற போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. திருச்சியில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அரசு மதுக்கடையில் மது வாங்கிக் குடித்த இருவர் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சியில் அரசு மதுக்கடையில் மது குடித்த முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர் திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் குடித்த மதுவில் நஞ்சு எதுவும் கலக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அப்படியானால், அரசு மதுக்கடையில் ஒன்றாக மது வாங்கி ஒன்றாக அருந்திய இருவர் உயிரிழந்ததற்கான காரணம் என்ன? என்ற வினாவும் அச்சமும் எழுகிறது.
அண்மைக்காலங்களில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, மதுரை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மதுக்கடைகள் மற்றும் குடிப்பகங்களில் மது வாங்கி குடித்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சாவூரில் இறந்தவர்கள் குடித்த மதுவில் சயனைடு நஞ்சு கலக்கப்பட்டிருந்தது என்று கூறப்பட்டாலும், அதைக் கலந்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிவதற்கான விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மது உயிரைக்குடிக்கும் எமன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கடந்த சில வாரங்களில் மது குடித்தவர்கள் உடனுக்குடன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. மதுக்கடைகளில் கலப்பட மது விற்பனை செய்யப்பட்டதா? என்று பல்வேறு தரப்புகளில் எழுப்பப்படும் ஐயங்களுக்கு விடையளிக்க வேண்டியது அரசின் கடமை. அரசு மதுக்கடை மரணங்கள் குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது தான் அனைத்துக்கும் காரணம் ஆகும். மதுவில்லாத தமிழகமே மகிழ்ச்சியான தமிழகமாக அமையும். எனவே, தமிழ்நாட்டில் அனைத்து மது வகைகளாலும் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழக்கும் கொடுமைக்கு முடிவு கட்ட, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.