ADMK vs BJP: ‘டில்லியில் நடந்தது இது தான்.. நிறைய கட்சி காலியாக போகுது’ பாண்டே பரபரப்பு தகவல்!
Rangaraj Pandey: ‘பாஜக 25 சதவீதம் ஓட்டு வாங்கினால், அதிமுக 30க்கு கீழ் தான் ஓட்டு வாங்கும். 40 சதவீதம் திமுக வாங்கிவிடும்’
அதிமுக கூட்டணி முறிவுக்குப் பின் அண்ணாமலையின் டில்லி பயணத்தில் நடந்தது என்ன என்பது குறித்து மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, யூடியூப் சேனலுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
ட்ரெண்டிங் செய்திகள்
‘‘அண்ணாமலையின் டில்லி பயணம் தொடர்பான எதிர்பார்ப்பு, ‘பாஜக எப்படியாவது வீழ்ந்து விடாதா, என்கிற அபிலாஷையில் இருப்பவர்களின் எண்ணத்தில் தான் உதிக்கிறது. பாஜக மாநில தலைவர் காலியாக இருப்பதாக யாராவது சொன்னார்களா? காலியாக போவதாக யாராவது சொன்னார்களா?
தமிழகத்தை பொருத்தவரை, பாஜக மாநில தலைமையும், பாஜகவும் தான் நிறைய கட்சிகளை காலி பண்ணப் போகுது. அண்ணாமலை நேரடியாக நிர்மலா சீதாராமனை சந்தித்தார் என்று பேசுகிறார்கள். மோடி, அமித்ஷா, நட்டாவை சந்தித்த பிறகு தான் நிர்மலாவை சந்திக்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதா? இவர்கள் மூன்று பேரை சந்திக்கப் போவதாக யாரிடமாவது அண்ணாமலை கூறினாரா? இல்லை அவர்கள் தெரிவித்தார்களா?
தகவல் வருது, தகவல் வருது என செய்தி நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் பாஜக உருப்படக் கூடாது என்று ரொம்ப கவனமாக இருப்பவர்கள் சேர்ந்து கிளப்பிடுகிறார்கள். ‘அவர் போனாராம், அவர்கள் பார்க்கவே இல்லையாம், அவர் முகத்தை திருப்பிக் கொண்டார்களா’ என்னென்ன கற்பனை முடியுமோ, அதை எல்லாம் சொல்கிறார்கள்.
மேலிடத்தலைவர் சந்தோஷ்ஜியை பார்க்கப் போவதாக அண்ணாமலை கூறினார். மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் 5 மாநில தேர்தலில் பிஸியாக உள்ளனர். அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள். இங்கே எந்த அவசரமும் இல்லை என்பதால், அவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை.
நான் டில்லியில் விசாரித்த வரை, எனக்கு கிடைத்த தகவலின் படி, அண்ணாமலை தான் அனுமதி வாங்கி பேசியிருக்கிறார். நிர்மலா சீதாராமன் சம்மன் அனுப்பவில்லை. அவர் ஒரு தமிழர், தமிழ்நாடு அரசியல் அவருக்கு நன்றாக தெரியும் என்பதால் நிர்மலாவை அண்ணாமலை சந்தித்திருக்கிறார்.
நிர்மலா உடன் கட்டாயம் அரசியல் பேசியிருப்பார். அவர்கள் அரசியல்வாதிகள், அரசியல் தானே பேசியிருப்பார்கள். உடனே, பென்ச் மேலே ஏற்றிவிட்டார்கள், முழங்கால் போட வைத்தார்கள் என்கிற ரேன்சுக்கு பேச வேண்டியதில்லை.
ஒரு மாநில தலைவர் உடனான பேச்சு வார்த்தையில், நாம் எதிர்பார்க்கும் படி இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. அது எல்லாமே கற்பனை தான். அடுத்த 48 மணி நேரம் கழித்து, ஒத்திவைக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அண்ணாமலை நடத்தப் போகிறார். அதன் பிறகு, 6 ம் தேதி மேட்டுப்பாளையத்தில் அவருடைய நடைபயணத்தை தொடங்குகிறார்.
பாஜக அகில இந்தியா தலைமை, டிசம்பர் வரை இதைப் பற்றி பேசாது. நீங்கள் எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்த எதுவும் நடக்காது. விவாகரத்து ஆகிவிட்டது, அதற்காக அழுது கொண்டு இருக்க முடியுமா? விருப்பப்பட்டால் அடுத்த கல்யாணம், இல்லையென்றால் பிரம்மச்சரியம் அவ்வளவு தான். அதிமுக போனதால், வாழ்க்கை தொலைந்து போன நிலையில் பாஜக இல்லை.
பாஜகவிற்கு சவால் காத்திருக்கிறது என்பதை மறுக்கவில்லை. சவாலை எதிர்கொள்வது தான் வாழ்க்கை. எனக்கு ஒரு தேர்தல் கொடுங்கள் என்று தானே அண்ணாமலை கேட்கிறார். 25 சதவீதம் ஓட்டுகள் வாங்கிவிட்டால், தமிழ்நாடு அரசியலை மாற்றிவிடலாம். பாஜக 25 சதவீதம் ஓட்டு வாங்கினால், அதிமுக 30க்கு கீழ் தான் ஓட்டு வாங்கும். 40 சதவீதம் திமுக வாங்கிவிடும்.
அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம், அவரவர் கட்சியை அவரவர் வளர்க்க தான்,’’
என்று அந்த பேட்டியில் ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.