தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aadhaar: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க இறுதி நாள் அறிவிப்பு.. விவரம் உள்ளே

Aadhaar: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க இறுதி நாள் அறிவிப்பு.. விவரம் உள்ளே

Manigandan K T HT Tamil
Jan 31, 2023 01:58 PM IST

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இதுவரை 2.42 கோடி மின் நுகர்வோர், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்; பொதுமக்கள் கடைசிநாள் வரை காத்திருக்காமல் உடனடியாக மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளது. 90.69 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

2.38 கோடி வீடுகளுக்கான மின்இணைப்பில் 2.17 கோடி வீடுகளின் மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டது.

ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும்போது அவர்கள் ஆதார் எண் இணைக்க சில சவால்களை சந்திப்பதாக தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்சனையை களைவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒரு மின் இணைப்புடன் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் எண்களை இணைப்பதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டு அதை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெருநிறுவனங்கள், பண்ணைகள், அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு அதனுடைய அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர்கள் அவர்களின் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வாடகைதாரரும் அவருடைய ஆதார் எண்ணை இணைக்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்ததற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மீதம் இருக்கக் கூடிய 9 சதவீத மின் நுகர்வோர்களும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

15 நாட்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவே இறுதி வாய்ப்பாகும். கால நீட்டிப்பு என்பது மின் வாரியம் மூலம் இனி வழங்கப்பட மாட்டாது. இதுவே கடைசி காலக்கெடு ஆகும்.

மின் நுகர்வோர் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

IPL_Entry_Point

டாபிக்ஸ்