"ஸ்பீடு த்ரில்லா இருக்கும், ஆனா"-ரிஷப் பண்ட் நிலைமையை ஒப்பிட்டு ஷமிக்கு அட்வைஸ்
''ஸ்பீடு த்ரிலாதான் இருக்கும்.. ஆனால் ரிஷப் பண்ட் நிலைமையை நினைச்சுப் பாருங்க" என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ட்ரெண்டிங் செய்திகள்
நேற்றைய ஆட்டத்தில் முதலில் விளையாடி நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 108 ரன்களை எடுத்தது.
இதையடுத்து விளையாடிய இந்திய 20.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
நேற்றைய ஆட்டத்தில் அதிகபட்சமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை சுருட்டினார். 6 ஓவர்கள் வீசி 1 மெய்டன் ஓவரையும் அதில் வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார் ஷமி.
புதிய காரை வாங்கியுள்ள ஷமி
இதனிடையே, புதிய காரை சமீபத்தில் வாங்கிய முகமது ஷமி, அந்தக் காரில் இருப்பது போன்ற சிறிய வீடியோவை சமூக வலைத்தளமான டுவிட்டரில் பகிர்ந்து, "உண்மையில் வேகம் முக்கியம்தான் (Ofcourse speed matters)" என்று குறிப்பிட்டு பதிவொன்றை வெளியிட்டார்.
இதையடுத்து, அந்தப் பதிவை சிலர் வரவேற்றாலும் சில நபர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதில் ஒரு நெட்டிசன், காரை ஓட்டி விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் நிலையை நினைத்துப் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னும், சிலர் நீங்கள் காரை ஓட்ட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஒரு சில நெட்டிசன்கள் காரை பாதுகாப்பாக ஓட்டுங்கள் என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி ரிஷப் பண்ட், உத்தரகண்ட் மாநிலத்தில் அதிகாலை நேரத்தில் காரை ஓட்டிச் சென்றபோது சாலையில் இருந்த தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய கார் உடனடியாக தீப்பிடித்தது. எனினும், துரித கதியில் செயல்பட்ட ரிஷப் பண்ட் காரில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறியதால் உயிர் தப்பினார்.
அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த சிலர், உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்