HT Explainer: ‘மனி லாண்ட்ரிங்’ என்றால் என்ன? அது ‘கருப்பு’ பணமாவது எப்படி? அதிர்ச்சியான கள நிலவரம்!
Money Laundering: வெள்ளை பணமாக மாற்றாத வரை, வங்கி பரிவர்த்தனை, பொருளாதார பரிவர்த்தனைகளில் அந்த பணத்தை கொண்டு வர முடியாது. அதனால் தான் மனி லாண்ட்ரிங் மூலம் கருப்பு பணம் வெள்ளையாக்கப்படுகிறது.
இந்தியாவில் சமீபத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை, ‘மனி லாண்ட்ரிங்’. இதற்கு முன் கருப்புப் பணம் என்கிற வார்த்தையை தான் மக்கள் அதிகம் கேட்டிருப்பார்கள். உண்மையில் அது பற்றிய புரிதலும் பலருக்கும் உண்டு. அரசின் விதிகளுக்கு அப்பாற்பட்டு, வரிகளுக்குள் வராமல் சேர்க்கப்படும் பணம் தான் கருப்பு பணம் என்கிற எளிய புரிதல் பலரிடத்திலும் உண்டு. இது என்ன மனி லாண்ட்ரிங்? என்கிற குழப்பம் பலரிடத்தில் இருக்கலாம். அதை நீட்டி முழக்கி பொருளாதார மேதை போல் விளக்கினால் பலருக்கு புரியாது. அதே நேரத்தில் அதை புரியும் படியாக எளிதிலும் விளக்க முடியும். அதற்கான முயற்சியை கையில் எடுக்கிறது ‘இந்துஸ்தான் டைம்ஸ்’. இதோ மனி லாண்ட்ரிங் தொடர்பான விளக்கம்:
ட்ரெண்டிங் செய்திகள்
மனி லாண்ட்ரிங் பெயர் வந்தது எப்படி?
மனி லாண்ட்ரிங் தொடர்பான 2002ல் பி.எல்.ஏ., சட்டத்தை இந்தியா கொண்டு வந்து, அதை பலமுறை திருத்தமும் செய்திருக்கிறார்கள். உலக அரங்கில் 1980ல் ‘வியனா கன்வென்ஷன்’ என்கிற மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தான் ‘மனி லாண்ட்ரிங்’ என்றால் என்ன என்பதை விளக்கி ஆலோசித்தனர். எப்.ஏ.டி.எப்., என்கிற உலகளாவிய அமைப்பு இதை எப்படி எதிர்த்து நிற்க வேண்டும் என்கிற ஆலோசனையை மேற்கொண்டது. இதில் உலக நாடுகளில் பொருளாதார பிரிவுகள் பங்கேற்றன. இந்தியாவும் அதில் பங்கேற்றது. மனி லாண்ட்ரிங் உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால், அது பற்றி ஆராயும் போது அதற்கு சூட்டப்பட்ட பெயர் தான் ‘மனி லாண்ட்ரிங்’. லாண்ட்ரிங் என்பது, நாம் வழக்கமாக அழுக்கு துணிகளை லாண்ட்ரிங் போடுவதை குறிக்கும் வார்த்தை. அழுக்குத் துணி லாண்ட்ரிக்கு போட்டால் எப்படி துணி வெள்ளையாகிறதோ, அது போல் தான் கருப்பு பணத்தை லாண்ட்ரிங்கில் போட்டு வெள்ளைப்பணமாக மாற்றுவது என்பதை குறிப்பதற்காக அந்த பெயர் வைக்கப்பட்டது.
‘மனி லாண்ட்ரிங்’ செயல்பாடு என்ன?
கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் நடைமுறை தான் ‘மனி லாண்ட்ரிங்’. கருப்பு பணத்தை பயன்படுத்த முடியாது. அது வெள்ளைப் பணமாக மாறினால் தான் அதை பொதுவெளியில் பயன்படுத்த முடியும். அதனால் தான் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. வெள்ளை பணமாக மாற்றாத வரை, வங்கி பரிவர்த்தனை, பொருளாதார பரிவர்த்தனைகளில் அந்த பணத்தை கொண்டு வர முடியாது. அதனால் தான் மனி லாண்ட்ரிங் மூலம் கருப்பு பணம் வெள்ளையாக்கப்படுகிறது. இந்தப்பணியை ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்றனர். இதற்கு உலகளாவிய அளவில் பெரிய நெட்வொர்க் உள்ளது.
கருப்பு பணம் எப்படி ‘மனி லாண்ட்ரிங்’ செய்யப்படுகிறது?
- வருமான வரி செலுத்தாத பணம் தான் கருப்பு பணம் என நாம் நினைக்கிறோம். அது உண்மை தான். ஆனால், அதை கடந்து இன்னும் பல வகையில் வரும் பணமும் கருப்பு பணம் தான். குறிப்பாக Dirty money (அழுக்கு பணம்) எனப்படும் பணமும் கருப்பு பணம் தான். உதாரணமாக, போதை பொருள் விற்று வரும் பணம், மனித உறுப்புகளை விற்று வரும் பணம், தீவிரவாத நடவடிக்கைகளில் வரும் பணம், இவையெல்லாம் Dirty money என்கிற அடிப்படையில் வரும் கருப்பு பணம். இந்த பணத்தை பெறுவோர் அதை வெள்ளபை் பணமாக மாற்ற மூன்று வழிகளை ஃபாலோ செய்வார்கள்.
- ப்ளேஸ்மெண்ட்: அழுக்கு பணத்தை கருப்பு பணமாக மாற்றுவது
- லேயிரிங்: கருப்பு பணத்தை வேறுறொரு தொழிலின் வருமானமாக காட்டுவது
- இன்ட்டகிரேட்: கருப்பு பணம் வெள்ளையாக மாற்றிய பின் தேவைக்கு பயன்படுத்துவது
சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்திற்கு வரி செலுத்த முடியாது. அப்படி செலுத்தினால் அந்த குற்றம் தெரிந்துவிடும். அதனால் தவறாக சம்பாதித்த பணத்தை, சரியாக சம்பாதித்ததாக வேறு ஒரு தொழில் மீது வந்த வருவாயாக காட்டி, அதை வெள்ளைப்பணமாக மாற்றும் முயற்சியை செய்வார்கள். இதற்காகவே சட்டத்திற்கு உட்பட்ட ஒரு தொழிலை, கடமைக்கு உருவாக்கி, அதன் மூலம் கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவார்கள். இதற்காகவே பல நிறுவனங்கள் ‘ஷெல் கம்பெனி’ என்கிற பெயரில் உலகம் முழுவதும் உருவாக்கப்படுகிறது. இது இந்தியா, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நடைமுறையில் உள்ளது. சுருக்கமாக சொல்லக வேண்டுமானால் ஒரே முகவரியில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான அலுவலகங்களின் பெயரில் நிறுவனம் இருப்பதாக காட்டப்பட்டிருக்கும்.
மனி லாண்ட்ரிங்கை கட்டுப்படுத்தும் துறை எது?
மனி லாண்ட்ரிங் மூலம வெள்ளையாக மாறும் பணத்தை வைத்து சொத்து வாங்குவது, வீடு வாங்குவது, தொழில் வாங்குவது போன்ற நடவடிக்கைகள் நடக்கும். இதற்காக வரி செலுத்துவார்கள், ஜிஎஸ்டி செலுத்துவார்கள், இன்னும் இதர அரசு நடைமுறைகள் எவையெல்லாம் இருக்கிறதோ, அதையெல்லாம் செய்வார்கள். ஆனால் அவை அவைத்தும் வெள்ளையாக மாற்றப்பட்ட கருப்பு பணத்தை கொண்டு செய்யப்பட்டவை என்பது சோதனை நடத்தும் வரை தெரியாது. இதை கண்டறியும் அதிகாரம், அமலாக்கத்துறைக்கு(Directorate of Enforcement) வழங்கப்பட்டுள்ளது. இதற்காக உட்சபட்ச அதிகாரத்தை அமலாக்கத்துறை பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய ஏஜென்சிகளில், அமலாக்கத்துறைக்கு இருக்கும் அதிகாரம், வேறு எந்த ஏஜென்சிக்கும் இல்லை.
டாபிக்ஸ்