தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fire Accident: சிலிண்டர் வெடித்து தீ விபத்து - ஆயிரம் குடிசைகள் கருகி சாம்பல்

Fire Accident: சிலிண்டர் வெடித்து தீ விபத்து - ஆயிரம் குடிசைகள் கருகி சாம்பல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 14, 2023 01:04 PM IST

Mumbai Fire Accident: மும்பை மலாட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. இந்த விபத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று உயிரழந்து இருப்பது தெரியவந்துள்ளது.

தீ விபத்தால் கரும் புகை மண்டலமாக காட்சியளித்த மும்பை மலாட் பகுதி
தீ விபத்தால் கரும் புகை மண்டலமாக காட்சியளித்த மும்பை மலாட் பகுதி

ட்ரெண்டிங் செய்திகள்

மலாட்டில் உள்ள ஆனந்த் நகரில் அமைந்திருக்கும் குடிசை வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பற்றி எரிந்துகொண்டிருந்த தீ அங்கிருந்த மற்ற குடிசைகளிலும் வேகமாக பரவியுள்ளது. இதன்காரணமாக அந்தப் பகுதியே கருமையான புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்த தீ விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது கண்முன்னே வீடுகள் பற்றி எரிந்த நிலையில், அங்கு வசித்தவர்கள் அங்கும் இங்குமாக ஓடி தண்ணீர் தெளித்து தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.

பின்னர் தகவலின் பெயரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீ பரவலை கட்டுப்படுத்தி, தீயை அணைத்தனர். மீட்பு குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்று அங்கிருந்த பொதுமக்களை மீட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர்.

இந்த விபத்துக்கு குறித்து ஆய்வு செய்த மும்பை மாநகராட்சி அலுவலர்கள், 10 ஆயிரம் சதுர மீட்டரில் நெருக்கமாக சுமார் ஆயிரம் வீடுகள் வரை கட்டப்பட்டதே விபத்துக்கு காரணம் என தெரிவித்தனர். அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் மொத்த 17 சிலிண்டர்கள் வரை வெடித்து சிதறியதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். தீ விபத்து தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்