Rahul Gandhi Case: ராகுல் காந்தி மேல்முறையீடு தள்ளுபடி - நாடெங்கும் வெடிக்கும் போராட்டம்
ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்தது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் இழந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த உத்தரவுக்கு எதிராக ராகுல் காந்தி குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் தனியாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு குறித்தான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இந்த வழக்கின் தீர்ப்பானது இன்று வெளியாகும் என ஜூலை 6 ஆம் தேதி அதாவது நேற்று சொல்லப்பட்டது. நாடு முழுவதும் இந்த தீர்ப்பு குறித்து எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி பெயர் பொருத்து சர்ச்சை கருத்தைத் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பூர்ணேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதன் காரணமாக நாடாளுமன்ற எம்பி பதவியை அவர் இழந்தார்.
இதனை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் செசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அவதூறு வழக்குத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருக்கு செசன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதனை அடுத்து ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடினார். கடந்த மே மாதம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவதூறு வழக்குத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் கோடைக்கால விடுமுறைக்குப் பின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரக்சாக் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று வெளியிட்ட அட்டவணையில், ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் ஜூலை 7ஆம் தேதி அதாவது இன்று 11 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று, அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் மேல்முறையீடு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது எனவும், அதில் தலையிட முடியாது எனவும் குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம் ராகுல் காந்தி மீது குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது எனக் குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தியின் மனுவைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை சாலை மறியலில் ஈடுபட்டவர்களில் தேனியில் 55 பேரும், விருத்தாசலத்தில் 50 பேரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டாபிக்ஸ்