3 Feet Doctor: உயரத்தை வைத்து புறந்தள்ளிய மருத்துவக் கவுன்சில்; வழக்குத்தொடுத்து வென்ற டாக்டர்!
உயரம் குறைவாக இருந்தாலும் ஊக்கத்தால் வென்ற டாக்டர் கணேஷ் பரையா குறித்த கட்டுரை..
குஜராத்: 23 வயதான டாக்டர் கணேஷ் பரையா சில ஆண்டுகளுக்கு முன்பு உயரம் குறைவாக இருந்த காரணத்தால், அவரது எம்.பி.பி.எஸ் படிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில் தகுதி நீக்கம் செய்தது. அப்போதும் அவர் மனம் தளரவில்லை.
மூன்றடி உயரம் கொண்ட டாக்டர் கணேஷ் பரையா, தனது உறுதிக்குக் குறையவில்லை. அவர் தனது கல்லூரி முதல்வரின் உதவியைப் பெற்று, மாவட்ட ஆட்சியர், மாநில கல்வி அமைச்சரை அணுகி, பின்னர் குஜராத் உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார்.
இதுதொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தோற்ற பிறகும், டாக்டர் கணேஷ் பரையா நம்பிக்கை இழக்கவில்லை. அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
2018ஆம் ஆண்டில் வழக்கில் வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டில், எந்தவொரு காரணத்துக்காக ஒதுக்கப்பட்டாரோ அதே படிப்பான MBBS படிக்க சேர்க்கை பெற்றார். இப்போது தனது MBBS படிப்பை முடித்த கணேஷ் பரையா, பிறகு பாவ்நகரில் உள்ள Sir-T மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிகிறார்.
"நான் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, எம்பிபிஎஸ் படிப்பில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவராக விண்ணப்பித்தேன். இந்திய மருத்துவக் கவுன்சில் குழு எனது உயரத்தை வைத்து என்னை படிக்க முடியாது என நிராகரித்தது. எனது உயரம் குறைவாக இருப்பதால் அவசரகால வழக்குகளை என்னால் கையாள முடியாது என்றும் அவர்கள் கூறினர். பிறகு, நீலகாந்த் வித்யாபீடத்தின் எனது முதல்வர் டாக்டர் தல்பத் பாய் கட்டாரியா மற்றும் ரேவசிஷ் சேர்வையா ஆகியோரிடம் இதைப் பற்றி எல்லாம் பேசினேன். இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று அவர்களிடம் கேட்டேன்" என்று டாக்டர் கணேஷ் தனது ஆரம்பப் போராட்டம் குறித்து கூறினார்.
‘’குஜராத்தின் பாவ்நகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் குஜராத் கல்வி அமைச்சரை சந்திக்கச் சொன்னார்கள். பாவ்நகர் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் பேரில், குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்தோம். என்னைப் போல், நீட்டில் வென்ற இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருந்தனர்.
அதில் நாங்கள் தோற்றோம். அதன்பின், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம்," என்று அவர் மேலும் கூறினார்.
இறுதியாக தனது எம்பிபிஎஸ் பயணம் எப்படி தொடங்கியது என்பது குறித்து டாக்டர் கணேஷ் கூறுகையில், "எம்பிபிஎஸ் படிப்பில் சேரலாம் என்று 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்குள் 2018-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கான அட்மிஷன் முடிந்துவிட்டதால், 2019-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றேன். எனது எம்பிபிஎஸ் பயணம் தொடங்கியது" எனப் பூரிப்புடன் தெரிவித்தார்.
அவரது உயரம் காரணமாக அவரது அன்றாட சவால்கள் குறித்து, டாக்டர் கணேஷ் பரையா கூறுகையில், ‘’நோயாளிகள் முதலில் தனது உயரத்தை மதிப்பீடு செய்தாலும், காலப்போக்கில் வசதியாகி தன்னை மருத்துவராக ஏற்றுக்கொண்டார்கள்.
நோயாளிகள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் முதலில் சற்றுத் திடுக்கிட்டாலும் பிறகு அவர்கள் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். நானும் அவர்களின் ஆரம்ப நடத்தையை ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்துகொள்கிறார்கள். அவர்களும் மகிழ்ச்சியாகிறார்கள்," என்று அவர் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்