Dhanush: ‘படிக்காதவன்’ ஏற்படுத்திய கசப்பு’ - தனுஷுடன் மீண்டும் இணையும் வடிவேலு?
மாரிசெல்வராஜ் தனுஷ் இணையும் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற அழுத்தமான திரைப்படத்தை கொடுத்து கவனம் பெற்றவர் இயக்குநர் மாரிசெல்வராஜ். பரியேறும் பெருமாள் படம் கொடுத்த தாக்கம், தன்னுடைய இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை இயக்கும் வாய்ப்பை பெற்றார் மாரி. அந்த திரைப்படம்தான் ‘கர்ணன்’.
ட்ரெண்டிங் செய்திகள்
பேருந்து தன் ஊரில் நிற்காததை தட்டிக்கேட்கும் கிராமம் எப்படி ஜாதிய வன்மத்தில் சிக்குகிறது, அதனால் அந்த கிராமம் எதிர்கொண்ட விளைவுகள் என்னென்ன என்பதை சுற்றி அந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது. அடிப்படையில் கவிதைகள் மீது பேரார்வம் கொண்ட மாரி, அந்த திரைப்படத்தையும் அதே அழகியலோடு எடுத்திருந்தார்.
கொரோனா தொற்று காரணமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதியளித்திருந்த காலத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் எகிடுதகிடு ஹிட்டடித்தது. அந்த படத்தின் போதே மாரி செல்வராஜூடன் இன்னொரு படத்தில் தான் இணைய இருப்பதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். அதன் பின்னர் பிற படங்களில் தனுஷ் பிஸியான நிலையில் இந்த திரைப்படத்தின் அப்டேட் என்ன என்பது குறித்தான தகவல்கள் வெளியாகமல் இருந்தன.
இந்த நிலையில் அண்மையில் தனுஷின் ‘வொண்டர்பார்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியான அறிவிப்பில் மாரி செல்வராஜ் தனுஷ் இணையும் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான அறிவிப்பில் நடிகர் தனுஷ், “ பல்வேறு காரணங்களால் மிகவும் மதிப்பு வாய்ந்த படமாக இது இருக்கிறது. ஓம் நமச்சிவாய” என்று பதிவிட்டு இருந்தார். இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவை நடிக்க வைக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக தனுஷ் நடித்த படிக்காதவன் திரைப்படத்தில் விவேக் நடித்த அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலுதான் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பில் நடந்த சில கசப்பான சம்பவங்களால் வடிவேலு அந்த திரைப்படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர்தான் விவேக் அந்த கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தனுஷூடன் வடிவேலுவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது, மாரிசெல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள மாமன்னன் திரைப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இந்த திரைப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த திரைப்படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்வதில் மாரிக்கு சிக்கல் இருக்காது என்று திரைவட்டாரங்கள் சொல்லுகின்றன.
டாபிக்ஸ்