திருவாரூர் ருண விமோசனர் வழிபாடு சிறப்புகள்!
கடன், நோய் மற்றும் எதிரிகளின் தொல்லையிலிருந்து மீள உதவும் திருவாரூர் ருண விமோசனர் வழிபாடு குறித்து இங்கே காண்போம்.
கடன்கள், நோய்கள் மற்றும் எதிரிகளின் தொல்லைகளிலிருந்து மீண்டு வர உதவும் திருவாரூர் ருண விமோசனர் வழிபாடு. மனிதர்களுடைய வாழ்க்கை எப்போதுமே மகிழ்ச்சியாக இருந்து விடுவதில்லை.
அவ்வப்போது பலதரப்பட்ட பிரச்னைகள் மனிதர்களை வாட்டுகின்றன. குறிப்பாக நோய்,கடன் அல்லது எதிரிகள் என்று ஏதேனும் ஒரு தொல்லை ஏற்படக்கூடும்.
சிலருக்கு மூன்று தொல்லைகளுமே ஏற்படக்கூடும் நோய், கடன், எதிரி இம்மூன்றுக்கும் உரிய இடம் ஆறாம் பாவமாகும் இந்த ஆறாம் பாவத்தைக் கொண்டுதான் ஜாதகருக்கு வரக்கூடிய நோய்கள், கடன் மற்றும் எதிரிகள் பற்றி துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும்.
இப்படி ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் இடம் பாதிக்கப்பட்டு ஒருவருக்கு நோய், கடன் அல்லது எதிரிகளின் தொல்லை ஏற்பட்டால் அவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தி ருணவிமோசன மூர்த்தி.
திருவாரூர் கோயிலில் பிரத்தியேகமாகச் சன்னதி கொண்டிருக்கும் இவரை வழிபட்டுத் தான் இந்திரன் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதியிலிருந்து நிவாரணம் பெற்றதாகத் தல வரலாறு கூறுகிறது.
இவரை ஞாயிறு, திங்கள், வெள்ளி ஆகிய கிழமைகளில் ஏதேனும் ஒரு கிழமை தொடர்ந்து 11 வாரங்கள் அபிஷேகம், அர்ச்சனை செய்த வழிபட்டு வந்தால் நோய், கடன் எதிரிகள் போன்ற பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
தொடர்ந்து ஆறு அமாவாசைகளில் உப்பு, மிளகு சமர்ப்பித்து வழிபட்டாலும் மேற்கண்ட பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய காலத்துக்கும் முன்னதாக தோன்றிய தலம் திருவாரூர் என்று நாவுக்கரசர் பெருமான் திருவாரூர் தல சிறப்பினை போற்றிப் பாடி இருக்கிறார்.
கோயில் பெரிது, குலம் பெரிது, தேர் பெரிது என்று அனைத்திலும் பெரியது என்ற சிறப்பினுக்கு உரிய இந்த தலத்தில், ஒரு வருடத்தின் நாட்களைக் குறிக்கும் வண்ணம் 365 சிவலிங்கம் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பது மிகச்சிறப்பு. இந்த தலத்தில் பல பரிகார பூஜைகள் இருந்தாலும் ருண விமோசன மூர்த்திக்கு நடைபெறும் பரிகார பூஜை மிகவும் விஷேசமானது.