Sabarimala: சபரிமலையில் அனைத்து பூஜைகளும் நிறைவு; இத்தனை லட்சம் பேர் தரிசனமா?
Sabarimala Ayyappa Temple: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை காலம் முடிவடைந்ததையடுத்து இன்று கோயில் நடை சாத்தப்பட்டது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து அன்று இரவு நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு ஜனவரி 14 அன்று மகர விளக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மகர ஜோதியை காண விரதம் இருந்து இருமுடி கட்டி வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்த இரண்டு மாத மண்டல, மகரவிளக்கு பூஜைக் காலங்களில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் தரிசனத்துக்காக சபரிமலையில் குவிந்தனர். பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
நேற்று இரவுடன் பக்தர்கள் தரிசனத்துக்கான அனுமதி நிறைவு பெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. காலையில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. இதில், பந்தளம் ராஜா பிரதிநிதி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின்பு காலை 7 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்பட்டது.
தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது. பிப்ரவரி 12 முதல் 17 ஆம் தேதி வரை சிறப்புப் பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவிலான பக்தா்களே அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த முறை புல்மேடு, கரிமலை, நீலிமலை ஆகிய 3 வனப்பாதைகள் வழியாகவும் பக்தர்கள் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கவும், பெருவழிப்பாதை வழியாக சன்னிதானம் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த இரண்டு மாதங்களில் மட்டும் தமிழகம், கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் சுமார் 50 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சபரிமலை நடப்பு சீசனில் கடந்த 17 ஆம் தேதி வரை பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக ரூ.320 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்