தலை சாய்ந்து காட்சியளிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர்
கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள் குறித்து காண்போம்.
தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே கொத்தங்ன்குடி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சியம்மாள் சமேத மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானதாகும். இக்கோயிலில் உள்ள ஈசனைக் கிருஷ்ணர், அர்ஜுனர் இவ்விடம் தங்கி இருந்து வழிபட்டார்கள். இக்கோயிலின் முகப்பில் விநாயகர் சிலையும் சிறிய மண்டபத்தில் சண்டிகேசுவரர் அருகிலேயே அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய மகா மண்டபம் காணப்படுகின்றது.
சுவாமி சன்னதியின் வலதுபுற பிராகாரத்தில் ஸ்ரீ கங்கா காவிரி விநாயகர் சன்னதி உள்ளது. அருகிலேயே திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், நாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தனி சன்னதிகளில் காட்சி தருகின்றன.
பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று தியான நிலையில் அமர்ந்த கோலத்தில் அனைவருக்கும் குருவான தக்ஷிணாமூர்த்தியும் பக்தர்களுக்கு இங்கு அருள் புரிகின்றார். சுவாமி சன்னதியில் நான்கு புறமும் விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை அம்மன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
தனங்களை அள்ளித்தரும் செந்தாமரை மலரில் அமர்ந்த கோலத்தில் மகாலட்சுமி, சுவாமி ஐயப்பன் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். சுவாமி சன்னதி எதிரே வைரவ மூர்த்தி, காஞ்சி மகா பெரியவர், சந்திரனார், சூரியனார், நவகிரகங்கள் என ஒரே மண்டபத்தில் எழுந்தருளி காட்சி கூறுகின்றனர்.
மனதில் உள்ள குறைகளைச் செவிமடுத்துக் கேட்பதால் இவ்விறைவன் சற்றே தலை சாய்ந்து காட்சி தருகின்றார். வருடம் தோறும் பங்குனி மாத பௌர்ணமி முதல் நாளிலிருந்து நான்கு நாட்கள் தொடர்ந்து சூரிய கதிரானது சுவாமியின் மேல் பட்டு, சூரியனார் வழிபடுவது தனிச் சிறப்பாக இருந்து வருகின்றது.