Crime : பெரம்பலூரில் மர்மம்.. எரிந்து கொண்டிருந்த இளைஞர் உடல்..யார் இவர்?
Feb 21, 2023, 01:12 PM IST
perambalur : பெரம்பலூரில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் எரித்துக் கொலைச்செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர்: புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சோளகாட்டில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் இருசக்கர வாகன ஷோரூம் ஒன்று அமைந்துள்ளது. இதற்கு பின்பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த ராஜா சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான காலி மனை உள்ளது. இந்நிலையில் இன்று காலை அந்த காலிமனை பகுதியில் இருந்து துர்நாற்றத்துடன் கூடிய புகை வெளிவந்தது.
அந்த காலிமனையில் எதோ ஒன்று எரிந்துகொண்டிருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதன் அருகில் சென்று பார்த்த போது அது இளைஞர் ஒருவர் உடல் என்பது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக நிலத்தின் உரிமையாளர் ராஜா சிதம்பரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் நகர போலீசார் அந்த எரிந்த இளைஞரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலுக்கு அருகிலேயே மண்எண்ணெய் கேன் ஒன்றும் கிடந்தது.
எனவே நள்ளிரவில் அவரை யாராவது அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி வந்து இங்கு வைத்து எரித்து கொலை செய்தார்களா? அல்லது அந்த இளைஞர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூரில் இளைஞர் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்