DMK Vs ADMK: ‘பெண்ணுரிமை பேசும் ஸ்டாலின் திமுக தலைவராக கனிமொழியை ஆக்குவாரா?’ ஜெயக்குமார் கேள்வி!
Oct 15, 2023, 05:57 PM IST
”காவிரி நீரை பெற்றுத்தருவதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது”
சென்னையில் அதிமுக சார்பில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு காலம் உள்ளது. அதிமுக தலைமையில் நிச்சயமாக மெகா கூட்டணியை அதிமுக பொதுச்செயலாளர் அமைப்பார். பாஜக கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி இப்போதும் அல்ல, எப்போதும் அல்ல என்பதை ஈபிஎஸ் அவர்கள் தெளிவுப்படுத்திவிட்டார்.
திமுக கூட்டணி பலவீனமாக உள்ளது. நெல்லிக்காய் மூட்டை போல் அந்த கூட்டணியை ஸ்டாலின் வைத்துள்ளார். அது அவிழ்ந்தால் கூட்டணி சிதறும். அரசியலில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம், திமுக கூட்டணியில் எந்த கட்சியும் உணர்வுபூர்வமாக இல்லை. தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம்.
தமிழ்நாட்டில் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி தருவது அரசின் கடமை. ஆனால் அது இங்கு இல்லை, ஆதாய கொலைகள், கட்டப்பஞ்சாயத்து, செயின் திருட்டு உள்ளிட்டவை தற்போது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.
காவிரி நீரை பெற்றுத்தருவதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது. நான்கரை லட்சம் ஏக்கர் சாகுபடி பாழாகிவிட்டது. சோனியா காந்தியிடம் காவிரி நீர் வராமல் இருப்பது குறித்து முதலமைச்சர் நிர்பந்தம் செய்யவில்லை.
பெண்ணுரிமையை பற்றி பேசும் ஸ்டாலின், திமுக தலைவராக கனிமொழியை கொண்டுவருவாரா?, மகளிர் இட ஒதுக்கீட்டை அன்று கொண்டு வரும்போது முதல் கையெழுத்தை அம்மா அவர்கள் அரசு போட்டது. உள்ளாட்சி பொறுப்பில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தந்தது அம்மாதான். வாஜ்பாய் அரசிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை நிறைவேற்ற அதிமுக போராடியது.