Crime News : பெண்ணிடம் செயின் பறிப்பு – விரட்டிச்சென்று கொள்ளையனை பிடித்த மகன்
Mar 21, 2023, 11:26 AM IST
Chain Snatching : கோவையில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். பைக்கில் சென்ற நபர்களை பாதிக்கப்பட்டவரின் மகன் துரத்திச்சென்று பிடித்தார். தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாமணி (43). இவரது கணவர் வேணுகோபால். ராதாமணி இல்லத்தரசியாக உள்ளார். சம்பவத்தன்று ராதாமணி தனது மகனுடன் தனியார் மருத்துவமனையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இனிப்பு கடை ஒன்றின் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், ராதாமணி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் நகையை பறித்துச் சென்றனர்.
இதனை அடுத்து ராதாமணியின் மகன் நகை பறிப்பில் ஈடுபட்டவ கொள்ளையர்களை துரத்திச்சென்றார். அதில் ஒரு நபரை மட்டும் கையும் களவுமாக பிடித்துவிட்டார். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் பழனிநாதன் என்பதும், அவர் 7 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் பணிபுரிந்தபோது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பழனிநாதனை கைது செய்த துடியலூர் காவல்துறையினர், அவருடன் கொல்லையில் ஈடுபட்ட முருகானந்தன் என்பவரையும் தேடி வருகின்றனர்.
மேலும் தாயிடம் நகையை பறித்துச்சென்ற கொள்ளையனை துரத்திச்சென்று பிடித்த இளைஞரைகள் பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டினர். மேலும் இளைஞர்கள் இதுபோல் சாலையில் தங்களது பெற்றோரோ, உறவினரோ மட்டுமின்றி மற்ற பொதுமக்கள் பாதிக்கப்படும்போதும் உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் பெண்கள் வெளியே செல்லும்போது அதிகளவு தங்க நகைகளை அணிந்து செல்ல வேண்டாம் என்றும், அப்படி செல்ல நேரிட்டால் துணியால் நன்றாக கழுத்தை மூடிக்கொண்டு செல்ல வேண்டும் என்றும் போலீசார் பெண்களுக்கு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்