Thiruma Health: ’எப்படி இருக்கீங்க திருமா’ போனில் பேசிய ஈபிஎஸ்! கூட்டணிக்கு அச்சாரமா?
Sep 27, 2023, 10:32 AM IST
”காய்ச்சல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருமாவளவன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்”
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று முன் தினம் இரவு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். இதனால் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தொண்டர்கள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என விசிக சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியானது முதல் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக அமைக்கும் கூட்டணியில் இணையலாம் என வலதுசாரி அரசியல் விமர்சகர்கள் ஊடக விவாதங்களில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். பாஜக கூட்டணியை முறித்து அதிமுக வெளியே வந்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பேர வலிமை அதிகரிக்கும் என பேசப்பட்டது.
இந்த நிலையில் இத பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் பயணிக்கும் என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் அவர் இட்டிருந்த பதிவில், “திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் விடுதலைச்சிறுத்தைகள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது.
கடந்த 2021 ல் நடைப்பெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் 6 இடங்களே ஒதுக்கப்பட்ட போதும், பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம். ஆகவே, திமுக தலைமையலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே” என கூறி இருந்தார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்புகொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.