ADMK VS DMK: ‘நாட்டாமையாக மாறி பஞ்சாயத்து செய்கிறார்!’ சபாநாயகருக்கு ஜெயக்குமார் கண்டனம்!
Oct 12, 2023, 07:56 PM IST
”ஜனநாயகத்திற்கு விரோதமாக, வலுக்கட்டாயமாக சபையில் இருந்து வெளியேற்றிவிட்டு, கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை பேசவிட்டு ரசித்து மகிழ்கிறார் பேரவைத் தலைவர்”
தமிழக சட்டப் பேரவையின் தலைவர் திரு. அப்பாவு அவர்கள் நடுநிலையோடு செயல்படாமல், நாட்டாமை செய்து கொண்டிருப்பது மக்களை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. தமிழக சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சியும், 30 ஆண்டுகள் தமிழகத்தில் நல்லாட்சியும் தந்த, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சிறுமைப்படுத்தும் வேலையிலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கழகத்தில் இருந்து பொதுக்குழுவால் நீக்கப்பட்ட புல்லுருவிகளுக்கு கொம்பு சீவிவிடும் வேலையிலும் சபாநாயகர் திரு. அப்பாவு ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
தங்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சரும், பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் எடப்பாடியார் அவர்களையும், 63 கழக சட்டமன்ற உறுப்பினர்களையும் 11.10.2023 புதன் கிழமையன்று, ஜனநாயகத்திற்கு விரோதமாக, வலுக்கட்டாயமாக சபையில் இருந்து வெளியேற்றிவிட்டு, கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை பேசவிட்டு ரசித்து மகிழ்கிறார் பேரவைத் தலைவர்.
திரு. அப்பாவு அவர்கள், தான் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவான சபாநாயகர் பதவி வகிக்கிறோம் என்பதை மறந்து, நாட்டாமையாக மாறி பஞ்சாயத்து செய்வதை திமுக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பது முற்றிலும் ஜனநாயக விரோதச் செயலாகும்.
"ஒரு முன்னாள் முதலமைச்சர் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகே இடம் ஒதுக்கப்பட்டதாகக் கூறுகிறார் திரு. அப்பாவு'. அப்படியானால் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலமைச்சர் அருகில் அவருக்கு இடம் ஒதுக்குவாரா சபாநாயகர்?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நான்கு குழுக்களாக உள்ளது, மத்திய அரசு இவர்களை சேர்த்து வைத்தால்
என்ன செய்வது? என்று, தான் ஒரு சபாநாயகர் என்பதை மறந்து தி.மு.க. செய்தித் தொடர்பாளர் என்பது போல மனம் போன போக்கில் சட்டமன்றத்தில் பேசியுள்ளது, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது. இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
சட்டப் பேரவையில் சபாநாயகர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் அவர் நடுநிலையோடு நடக்க வேண்டும் என்பதை மறந்து அனைத்து மரபுகளையும் காற்றில் பறக்கவிட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் பேசும்போதும், அரசின் திட்டங்களையும், அதன் குறைகளையும் எடுத்துரைக்கும்போது, சம்பந்தப்பட்ட மந்திரிகள் பதில் அளிப்பதற்கு தயாராக இருக்கும்போதுகூட, தான் நடுநிலையான சபாநாயகர் பதவி வகிக்கிறோம் என்பதை மறந்து, தானே சம்பந்தப்பட்ட துறை மந்திரி போல் பதிலளிக்கிறார்.
இதனால் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தாங்கள் எழுப்பிய கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் இருந்து முழுமையான பதிலும், விளக்கமும் கிடைப்பதில்லை. தான் இப்படி நடந்துகொண்டால், முதலமைச்சர் தன்னை அமைச்சராக்குவார் என்று சபாநாயகர் கனவு காண்கிறார் போலும்!
சபாநாயகர் அவர்கள் இவ்வாறு தொடர்ந்து ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பல நடுநிலையான சபாநாயகர்களை அமர வைத்து பெருமைப்பட்ட சட்டப் பேரவைத் தலைவர் இருக்கையின் மாண்பைக் குறைத்தவர் மற்றும் ஜனநாயக மாண்புகளை சீரழித்தவர் என்று அவரது பெயர் தமிழக சட்டமன்ற வரலாற்றில் பொறிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதைத் கெரிவிக்கக்கொள்கிறேன்.