12th Supplementary Exam Results : 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – தெரிந்துகொள்வது எப்படி?
Jul 24, 2023, 06:21 AM IST
12th Supplementary Exam : 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு துணைத்தேர்வுகள் ஜூன் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று மதியம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 13ம் தேதி 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8,03,385 மாணவ-மாணவிகள் எழுதினர். இதற்கான முடிவுகள் மே 8ம் வெளியானது.
அதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்று 94.03 சதவீதம் தேர்ச்சியடைந்தனர். தேர்வு எழுதிய 4,21,013 மாணவிகளில், 4,05,753 மாணவிகள் என 96.38 சதவீதம் பேரும், தேர்வு எழுதிய 3,82,371 மாணவர்களில் 3,49,697 மாணவர்கள் என 91.45 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்தனர். தேர்வு எழுதி இருந்த மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் ஒரு மாணவரும் தேர்ச்சியடைந்தார். மேலும், இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகயே 4.93 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றனர்.
அதில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தச் சேர்ந்த மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண்ணான 600க்கு 600 மதிப்பெண்களை பெற்று தமிழக அளவிலும், திண்டுக்கல் மாவட்ட அளவிலும் முதலிடமும் பெற்றிருந்தார்.
மேலும், தேர்வில் தோல்வியடைந்த மற்றும் வருகைப் புரியாத மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில்கொண்டு துணைத்தேர்வு ஜூன் 19ம் தேதி முதல் நடைபெற்றது. 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது –
12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான துணைத்தேர்வு ஜூன் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக 24ம் தேதி (இன்று) மதியம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எண் மற்றும் பிறந்தத் தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு 27 மற்றும் 28ம் தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.
தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு என புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்