Jallikattu: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையில்லை-உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
May 18, 2023, 11:28 AM IST
Supreme Court of India: ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவரசச் சட்டத்தில் எந்தத் தவறும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.
பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு மட்டுமல்லாமல், சில மாவட்டங்களில் கோயில் விழாக்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நீதிமன்ற உத்தரவால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை ஏற்பட்டது. இதை கண்டித்து இளைஞர்களும் பொதுமக்களும் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையெங்கும் போராட்டம் வெள்ளமாக காட்சியளித்தது நினைவுகூரத்தக்கது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை நடத்த வழிவகை செய்து கொடுத்தது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் போலீஸார் பாதுகாப்புடன் மாவட்ட நிர்வாகத்தின் உரிய விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா உள்ளிட்ட அமைப்புகள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி விசாரிக்க தொடங்கியது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி ஒத்திவைத்தது.
இந்த சூழ்நிலையில், இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் இன்று வழங்கினர்.
டாபிக்ஸ்