Railway Scam: ரயில்வே வேலை ஆசைகாட்டி ரூ.1.56 கோடி மோசடி – 4 பேருக்கு வலை
Feb 21, 2023, 01:29 PM IST
Railway Job Cheating: ரயில்வேயில்வேலை வாங்கித்தருவதாகக் கூறி13பேரைசென்னைக்குஅனுப்பிரூ.1.56கோடியைமோசடிசெய்தநான்குபேர்கொண்டகும்பலைபோலீசார் தேடிவருகின்றனர்.
மும்பை சுன்னாப்பட்டியைச் சேர்ந்த ஹரிச்சந்திர கதம் என்பவரின் தந்தை திடீரென இறந்து போனார். அவர் மும்பை துறைமுகத்தில் வேலை செய்துவந்தார். தந்தையின் வேலையை வாங்க அவர் முயற்சி செய்தார். இதற்காக வழக்கறிஞர் சிவாஜி கனாகே என்பவரிடம் ரூ.2 லட்சம் கொடுத்தார். ஆனால், அந்தப் பணத்தை சிவாஜி திரும்பக் கொடுத்துவிட்டார். சில மாதங்கள் கழித்து மீண்டும் ஹரிச்சந்திராவை அணுகிய சிவாஜி தனக்குத் தெரிந்த சிலர் ரயில்வேயில் வேலை வாங்கிக்கொடுப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அதற்குப் பணத்தை முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என்று சிவாஜி தெரிவித்தார். ரயில்வேயில் வேலை கிடைக்கிறது என்றவுடன் ஹரிச்சந்திரா தனக்கும், தன்னுடைய உறவினர் ஒருவருக்கும் சேர்த்து ரூ.28 லட்சத்தை சிவாஜியிடம் கொடுத்தார்.
ஹரிச்சந்திராவுடன் சேர்த்து சிவாஜியிடம் ரயில்வே வேலைக்காக 13 பேர் பணம் கொடுத்துள்ளானர். அவர்களிடம் நான்கு பேர் பணத்தை வாங்கியுள்ளனர். பணம் கொடுத்த அனைவரும் மகாராஷ்டிராவின் லாத்தூர், ஒஸ்மனாபாத் போன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் மும்பை வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பைகுலாவிலுள்ள ஒரு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு மாதம் கழித்து 13 பேருக்கும் வேலையில் சேரும்படி கூறி கடிதம் வந்தது. அதில் புசாவல் ரயில்வே அலுவலகத்துக்கு வரும்படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு சென்றபோது கடிதம் போலியானது என்று தெரியவந்தது.
இதுகுறித்து ஹரிச்சந்திரா கூறுகையில், ‘எனது விவசாய நிலத்தை விற்று, வீட்டை அடமானம் வைத்து, கடன் வாங்கி ரயில்வே வேலைக்காகப் பணம் கட்டினேன். எங்களை புசாவல் ரயில்வே அலுவலகத்துக்கு வரும்படி கூறி கடிதம் அனுப்பினர். புசாவல் அலுவலகத்துக்குச் சென்றபோதுதான் அந்தக்கடிதம் போலி என தெரியவந்தது. தவறான கடிதம் அனுப்பப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, கொரோனா சோதனை நடத்தி அனைவரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ரயில் நிலையத்தில் வேலையில் ஈடுபடுத்தினர். ரயில் நிலையத்தில் பயணிகளின் சரக்கை சோதனை செய்யும் வேலை செய்தோம். ஒரு மாதம் வேலை செய்த பிறகுதான் அதுவும் போலி என்று தெரியவந்தது" என்று தெரிவித்தார்.
இதில் ரயில்வே அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு ஹரிச்சந்திரா, இது குறித்து ராகுல் யாதவ், பங்கஜ் குமார், ஹேப்பி சிங், சாந்தாராம் ஆகியோர்மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், வழக்குப்பதிவு செய்யவில்லை. தற்போதுதான் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்திருக்கின்றனர். அதில் ரூ.1.56 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இடைத்தரகராகச் செயல்பட்ட சிவாஜி தன்னுடைய மகளுக்கும் வேலை கேட்டு பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார். எனவே போலீசார் நான்கு பேரையும் தேடிவருகின்றனர்.