New Zealand:துருக்கி சிரியாவை தொடர்ந்து நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Feb 15, 2023, 01:14 PM IST
ஏற்கனவே கேப்ரியல் புயலால் நியூசிலாந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூசிலாந்தின் வெலிங்டன் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை.
ஏற்கனவே கேப்ரியல் புயலால் நியூசிலாந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி சிரியா துயரம்
துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் உலகத்தையே உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் என அனைத்தும் தரைமட்டமாகின. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கொத்துக்கொத்தாக உயிர் இழந்துள்ளனர். இந்த இரு நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உலகமே துயரத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என அச்சம் ஏற்படுகிறது.
தொடர்ச்சியாக கட்டிட இடிபாடுகளில் இருந்து குழந்தைகள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவிற்கு எச்சரிக்கை
இந்தியாவில் 59 சதவீத பகுதிகளில் நிலநடுக்க பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் 11 சதவீத பகுதிகள் மிக மோசமான நிலநடுக்க பாதிப்பிற்கு (Zone-5) உள்ளாகும் பகுதிகளாக உள்ளன. அவை இமயமலையை ஒட்டியபகுதிகள். 18 சதவீத பகுதிகள் பாதிப்பு அதிகமாக இருக்கும் சோன் – 4ல் உள்ளன. டெல்லி, மஹாராஷ்ட்ராவின் சில பகுதிகள், ஹரியானா, உத்ரபிரதேசம், பெங்கால், பீகார், புதுச்சேரி) 30 சதவீத பகுதிகள் சோன் – 3ல் உள்ளது. (சென்னை, கல்பாக்கம், கேரளா,கோவா,ஜார்க்கண்ட்,சத்தீஸ்கர்)
கட்டுமானம் குறித்த விவரங்கள்
இந்தியாவில் 2016ம்ஆண்டிலிருந்து தேசிய கட்டிட விதிமுறைகள் அமுலில் இருந்து வருகிறது. அதில் நிலநடுக்கத்தைத் தாங்க எந்த நடைமுறைகளை கடைபிடிக்கப்பட வேண்டும் என தெளிவான விதிமுறைகள் உள்ளன. இருப்பினும் அவை நிச்சயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த சட்டங்கள் ஏதும் இல்லை. பெரிய நிலநடுக்கம் தலைநகர் டெல்லியில் ஏற்பட்டால், 90 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாகும் என ஆய்வுகள் சொல்கின்றன.
டாபிக்ஸ்