MK Stalin: ’எங்கள குறி வைக்குறாங்க’ எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேச பேச்சு!
Jul 18, 2023, 03:41 PM IST
”ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்”
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பெங்களூருவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண் முக்தி மோர்ச்சா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA - INDIAN NATIONAL DEMOCRATIC INCLUSIVE ALLIANCE) என்ற பெயர் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இக்கூட்டத்தில் பேசிய கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தின் மீது ஆசையில் இல்லை; பிரதமர் பதவியில் ஆசை இல்லை; காங்கிரஸின் விருப்பம் எல்லாம் அரசியல் சாசனம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதியை காப்பது மட்டுமே” என்று தெரிவித்திருந்தார்.
இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அவர், இந்தியா கூட்டணியைவழிநடத்தும் வகையில் குறைந்தபட்ச செயல்திட்டம் அவசியம் என்றும் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வரும் போது தனது அமைச்சரவை சகாக்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாட்னா கூட்டத்தின்போதும் இது போன்ற ரெய்டு நடைபெற்றதாக தெரிவித்தார். இந்த ரெய்டுகள் எதிர்க்கட்சிகளை குறி வைத்து நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.