TamilNadu Assembly 2023: ’எந்த கொம்பனாக இருந்தாலும்’ பேரவையில் முதல்வர் ஆவேசம்!
காவல்துறை செயல்பாட்டில் குற்றம் குறைகள் இருக்கலாம் குறையே இல்லை என்று சொல்லமாட்டேன். குறை கண்டுபிடிக்கப்பட்டதும் அவை திருத்தப்பட்டதே தவிர கண்டும் காணாமல் விடப்படவில்லை - முதலமைச்சர் பதிலுரை.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் துறைரீதியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று காவல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் இரண்டாவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுறை அளித்து வருகிறார். அதில் பேசிய அவர், தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழக அரசு ஏதாவது ஒன்றை செய்து கொண்டிருக்கிறது.
மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்ல பயணவசதி செய்து தந்ததன் மூலம் 250 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளார்கள். மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செப்டம்பர் மாதம் முதல் தரப்போகிறோம்.
ஒரு கோடி பேருக்கு கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது 62ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை நடப்பாண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்துள்ளோம்.
தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய தொழில்களை ஈர்த்துள்ளோம். மாநில உள்நாட்டு உற்பத்தி 6.11 விழுக்காடாக உயர்ந்துள்ளது. வேளாண் உற்பத்தி அதிகரித்து பசன பரப்பும் அதிகரித்துள்ளது.
அவதூறுகளை யார் வீசினாலும், திசைத்திருப்பும் திருகு வேலைகளை யார் செய்தாலும் மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை, ஏமாற்றவும் முடியவில்லை.
காவல்துறை செயல்பாட்டில் குற்றம் குறைகள் இருக்கலாம் குறையே இல்லை என்று சொல்லமாட்டேன். குறை கண்டுபிடிக்கப்பட்டதும் அவை திருத்தப்பட்டதே தவிர கண்டும் காணாமல் விடப்படவில்லை.
எந்த குற்றவாளியையும், அது யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் நிச்சயமாக அவர்களை காப்பற்ற மாட்டோம் என்று உறுதியாக கூறுகிறேன்.
சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும் அதனை திருத்திக் கொள்ளும் பண்பை காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன்.