Summer Holiday : இனி ஜாலி தான்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விட்டாச்சு லீவு!
நாளை முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி தேர்வு முடிவு அடைகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் தனித்தேர்வர்கள் உள்பட 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வருகின்றனர். அதில் மாற்றுத் திறனாளிகள் 5 ஆயிரத்து 206 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும் ஆவர். சிறைவாசிகள் 90 பேரும் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 185 மையங்களில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், இயற்பியல், பொருளியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த 3 வாரமாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.3) நிறைவு பெறுகிறது.
இறுதி நாளான இன்று வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் மட்டும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவதை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.10 முதல் 21-ம் தேதி நடைபெற உள்ளன. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நாளை முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து மீண்டும் தேர்வு எழுத வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்