தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்’ ஆளுநரை விளாசிய முதல்வர்

’கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்’ ஆளுநரை விளாசிய முதல்வர்

Kathiravan V HT Tamil
Apr 10, 2023 12:27 PM IST

ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும் குடியரசுத் தலைவரும் அறிவுறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்

ஆளுநர் ஆர்.என்.ரவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என்.ரவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னாதாக ஆளுநரை விமர்சிக்க கூடாது என்ற சட்டமன்ற விதியை தளர்த்தும் தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்தார்.இத்தீர்மானத்திற்கு குரல் வாக்கெடுப்பும் பின்னர் எண்ணிக்கை வாக்கெடுப்பும் எடுக்கப்பட்டு பேரவையில் நான்கில் மூன்று பங்கு ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

பின்னர் ஆளுநர் குறித்த தீர்மானம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், இந்தாண்டு ஆளுநர் உரை கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டு நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக்கோரிக்கை நடந்து வரும் நிலையில், இரண்டாவது முறையாக ஆளுநர் பற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய விரும்பத் தகாத சூழலை இந்த அரசு விரும்பவில்லை. ஆனால் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஒரு அரசியல் கட்சியின் கண்ணோட்டத்தோடு செயல்படுவதல் இப்படி முன்மொழிய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இந்தியாவில் கூட்டாட்சியை உருவாக்கவும் சுயாட்சி கொண்டவையாய் மாநிலங்கள் உருவாக்கவும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னனி படையாய் செயல்படும் என்று டெல்லியில் பேரறிஞர் அண்ணா சொன்னதை சட்டமன்றத்தில் இங்கு நானும் வழி மொழிகிறேன்.

இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். இதை உணர்த்துவதற்கான நாளாக இது அமைந்துள்ளது. ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று பேரறிஞர் அண்ணா கூறியபோதிலும்; அதை கலைஞர் வழி மொழிந்தபோதிலும் அப்பதவி இருந்தவரை அதற்கான மரியாதையை கொடுக்க அவர்கள் தவறியதில்லை; நானும் இந்த அரசும் தவறியதில்லை

அனுமந்தையா நிர்வாக சீர்த்திருத்த ஆணையம் 1969இல் கட்சி அரசியல் வேறுபாடு, ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் இன்றி நம்பிக்கை வைக்க கூடியவராக ஆளுநர் இருக்க வேண்டும் என்று கூறியது.

கலைஞர் நியமித்த சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜமன்னார் குழு ஒன்றிய மாநில அரசு உறவுகள் குறித்து அளித்த அறிக்கையில், ஆளுநர் பதவியை ஒழிக்க மிகுந்த உகந்த தருணம் இது என்று பரிந்துரைத்தது.

இதே மன்றத்தில் அந்த அறிக்கை, பரிந்துரைகள் 5 நாட்கள் விவாதிக்கப்படு தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது வரலாறு

ஓன்றிய அரசு மாநில அரசு உறவுகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சர்க்காரிய தலைமையிலான கமிஷன் ஆளுநர் என்பவர் பற்றற்ற அடையளம் உள்ளவராக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்ய 2000ஆம் ஆண்டு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடாசலா அறிக்கையும் இதே கருத்தை வலியுறுத்தியது.

இன்னும் சொல்லப்போனால் குடியரசு தலைவரை பதவி நீக்க இம்பீச் மண்ட் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது போல் ஆளுநரை நீக்க இம்பீச் மண்ட அதிகாரம் சட்டமன்றத்திற்கு வழங்கலாமா என ஒரு கலந்த ஆலோசனையை வெளியிட்டு கருத்து கேட்கப்பட்டது

அரசியல் சட்டத்தின் தந்தை என நம் அனைவராலும் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ’ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாத அரசியல் சட்ட ஆளுநராக செயல்பட வேண்டும்’ என்பதை அரசியல் சட்ட நிர்ணய சபையில் வலியுறுத்தி உள்ளார்.

2010இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு ’ஆளுநர் நியமிக்கப்பட்டுவிட்டால் அரசியல் சட்டத்திற்குதான் விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் கட்சிக்கு இல்லை என்று மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது’

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அரசு உள்ள மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராக நண்பராகவும் ஆளுநர் இருக்க வேண்டும் என்று எத்தனையோ உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நமது ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பாராக இருப்பதற்கு தயாராக இருப்பதில்லை என்று அவர் பதவி ஏற்றதில் இருந்து செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தி வருகிறது

ஆளுநர் திறந்த மனதுடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல.

ஆளுநர் திறந்த இது அரசின் கொள்கைகளை தமிழ்நாட்டு மக்களை, சட்டமன்ற இறையான்மையை கொச்சைப்படுத்தி பொதுவெளியில் பேசுகிறார்.

ஆளுநர் என்ற நிலையை தாண்டி அரசியல்வாதியாக பேசுகிறார். ஆளுநர் பதவிக்கு என்னென்ன தகுதிகளை சர்க்காரிய அறிக்கை வலியுறுத்தி கூறி உள்ளதோ அந்த தகுதிகளை எல்லாம் மறந்துவிட்டு பேசுகிறார்.

குறிப்பாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் தமிழ்நாடு வரும்போதோ அல்லது பிரதமரை சந்திக்க நான் டெல்லி செல்லும்போதோ தமிழ்நாட்டு அரசுக்கு எதிராக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை அவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் இளைஞர்கள் தற்கொலைகள் தொடரும் நிலையில் கூட அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.

அதற்கு மேல் சென்று 'With Hold' என்றால் நிராகரிக்கப்பட்டதக பொருள் என்று ஆளுநர் விதாண்டாவதமாக பேசுகிறார்.

இந்த 'With Hold' அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கவே கூடாது என்று சர்க்காரிய அறிக்கை கூறியதை கூட அறியாதவர் போல் பேசுகிறார்.

அரசியல் சட்டப்பிரிவு 200இன் கீழ் ஆளுநரால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவை சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பபட்டுவிட்டால் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதைவிட வேறு வழி ஆளுநருக்கு இல்லை என்பது தெளிவு

மசோதாவை திருப்பி அனுப்பவேண்டுமென்றால் அதைக்கூட அமைச்சரவை அறிவுரைப்படி ஆளுநர் செய்ய வேண்டும் என்பதே விதி

சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தை மக்கள் பிரதிநிதிகள் அவையாக இருக்க கூடிய சட்டமன்றத்திற்கு வழங்கிவிட்டு அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன ஆளுநருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பு ஆகாது என்பதால் இந்திய அரசியல் சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை நாம் எடுக்க வேண்டும் என கருதுகிறேன்.

அரசியல் சட்டம் ஆளுநருக்கு தெரியவில்லை என்று நான் கூறமாட்டேன். ஆனால் அவர் இருக்க வேண்டிய அரசியல் சட்ட விசுவாசத்தை அரசியல் விசுவாசம் அப்படியே விழுங்கிவிட்டது என்றே இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அதனால்தான் உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி அரசின் கொள்கை முடிவுகளை விமர்சித்து மதசார்பின்மைக்கு எதிராக பேசுகிறார்.

ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி கொண்டு இருக்கிறார். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்.

சட்டமன்றத்திற்கு அரசியல் நோக்கத்தோடு இடஞ்சல் தர நினைத்தால் அதனை கைக்கட்டி வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்

தமிழ்நாட்டு மக்கள் பேராதரவை பெற்று ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு

சட்டமன்றம் நிறைவேற்றை அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்றும்,  ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும் குடியரசுத் தலைவரும் அறிவுறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

IPL_Entry_Point