One Sided Love : ஒருதலை காதல்னா கடத்தல் சகஜம் - போலீஸ் செய்ற காரியமா இது!
ஒரு தலையாகக் காதல் செய்த காவல்துறை அலுவலர் வலுக்கட்டாயமாக இளம் பெண்ணை கடத்திச் செல்ல முயற்சித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கல்யாணி புரத்தைச் சேர்ந்தவர் முப்புடாதி. 26 வயதுடைய இவரது மகன் மாரியப்பன் மணிமுத்தாறு ஒன்பதாவது பெட்டாலியன் காவல்துறை அலுவலராக பணியாற்றி வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இவர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அந்த இளம் பெண் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் கிராம அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
மாரியப்பன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி அந்தப் பெண்ணிடம் வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் பெற்றோரிடமும் திருமணம் குறித்துக் கேட்டுள்ளார். ஆனால் அப்பெண்ணின் பெற்றோர்கள் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை.
அந்த இளம் பெண் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த மாரியப்பன் நேற்று தன்னுடன் பணிபுரியும் சக காவல்துறை அலுவலர்களுடன் அந்தப் பெண்ணின் ஊருக்குச் சென்றுள்ளார்.
காரில் வந்த தனது நண்பர்களுடன் மாரியப்பன் வீடு புகுந்து அந்த இளம் பெண்ணை காரில் ஏற்ற முயற்சி செய்துள்ளார். இதனை தடுக்க வந்த பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இளம் பெண்ணை இழுத்துச் சென்ற சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மாரியப்பனை சுற்றி வளைத்துள்ளனர்.
இதனைக் கண்ட மாரியப்பன் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து கடையம் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாரியப்பனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மாரியப்பன் அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதல் செய்து வந்ததும், அதற்கு சம்மதிக்காத காரணத்தினால் அந்த இளம் பெண்ணை வழி கட்டாயமாக கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் மாரியப்பன் மீது கொலை முயற்சி, கடத்தல் முயற்சி உட்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தப்பிச் சென்று அவரது நண்பர்களை தற்போது காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
டாபிக்ஸ்