கச்சத்தீவு திருவிழா - 12 படகுகளில் ஆர்வத்துடன் புறப்பட்டு செல்லும் பக்தர்கள்
Kachchatheevu St Antony’s feast: இந்தியா - இலங்கை கடற்பரப்பில் அமைந்திருக்கும் கச்சத்தீவில் புனித அந்தோணியர் ஆலய திருவிழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இரு நாட்டை சேர்ந்த பக்தர்களும் உரிய அனுமதியுடன் அங்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இந்தியா - இலங்கை இடையே நடுக்கடல் பகுதியில் ராமேஸ்வரத்துக்கு அருகில் அமைந்துள்ளது கச்சத்தீவு. ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அங்கு அமைந்திருக்கும் புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறும்.
ட்ரெண்டிங் செய்திகள்
கொரோனா பாதிப்பு காரணமாக கச்சத்தீவு திருவிழா கடந்த 2020 முதல் 2022 வரை நடைபெறவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 4.30 மணிக்கு ஆலயத்தின் முன் பகுதியில் உள்ள அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குதந்தை எமலி பால் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து ஆலயத்தை சுற்றி 14 இடங்களில் சிலுவை பாதை திருப்பலி நடைபெறுகிறது. பின்னர் திருப்பலி பூஜையுடன் முதல் நாள் திருவிழா தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு அந்தோணியாரின் தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு இரண்டாவது நாளான நாளை காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டன் ஞானபிரகாசம் தலைமையில் இரண்டாம் நாள் திருவிழா திருப்பலி பூஜை நடைபெறுகிறது. காலை 9 மணி வரை நடைபெறும் இந்த திருவிழா திருப்பலி பூஜைக்கு பின்னர் கொடி இறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.
கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் இருந்து 60 விசைப்படகு மற்றும் 12 நாட்டுப்படகுகளில் 1960 ஆண்கள், 379 பெண்கள், 69 சிறுவர்கள் உள்பட 2,408 பக்தர்கள் பயணம் செய்கிறார்கள்.
போலீசார் மற்றும் சுங்கத்துறை பிரிவு கடலோர போலீசாரின் தீவிர சோதனைக்கு பின்னரே, வரிசை எண் அடிப்படையில் படகுகள் கச்சத்தீவை நோக்கி புறப்பட்டு செல்கிறது.
இந்த திருவிழாவை முன்னிட்டு அங்கு இலங்கை அரசு ஏற்பாட்டில் இலங்கை கடற்படை மற்றும் ராணுவத்தினர் இணைந்து, கச்சத்தீவில் இருநாட்டை சேர்ந்த பக்தர்களும் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் கச்சத்தீவை சுற்றி ஏராளமான ரோந்து கப்பல்களையும் பாதுகாப்பிற்காக இலங்கை கடற்படை நிறுத்தி வைத்துள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க வரும் 5ஆம் தேதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.