Crime: தம்பியை கட்டையால் அடித்தே கொலை செய்த அண்ணன் - என்ன காரணம்?
Thoothukudi Crime: தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உடன் பிறந்த தம்பியை அண்ணன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள சோழாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன்கள் பொன் மாடசாமி (30), முத்துராஜ் (26). இதில், பொன் மாடசாமி கறிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். முத்துராஜ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.பொன் மாடசாமிக்கு திருமணமாகிவிட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
டிரைவராக பணியாற்றி வந்த முத்துராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் மது, கஞ்சா போன்ற போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார். மேலும், அதிகளவில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பொன் மாடசாமி கண்டித்துள்ளார். இதனால் சகோதரர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடன்களை அடைக்க தனது பங்கு சொத்துக்களை விற்க வேண்டும் என்று கூறி முத்துராஜ் அடிக்கடி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு சகோதரர்களுக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருவரும் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பொன் மாடசாமி தனது உடன் பிறந்த தம்பி முத்துராஜை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தம்பியை அடித்து கொலை செய்துவிட்டு அண்ணன் பொன் மாடசாமி தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து எப்போதும் வென்றான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து பொன்மாடசாமியை போலீசார் தேடிவந்த நிலையில் கீழ ஈரால் பகுதியில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்னை காரணமாக தம்பியை அண்ணனே கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்