Madurai:அறை முழுக்க ஏசி.. சடலமாக கிடந்த தாய் - மகன்; ஷேர் மார்க்கெட்தான் காரணமா?
மதுரையில் தாய் மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை கரிமேடு கோச்சடை பகுதியில் உள்ள மல்லிகை தெருவை சேர்ந்தவர் உமாசங்கர்(46); இவர் SMJ என்கிற ஷேர் மார்க்கெட் கம்பெனி நடத்தி வருகிறார்; இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில், முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு 2ஆவது மனைவிக்கும் உமா சங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் 2ஆவது மனைவியும் வீட்டிலிருந்து சென்றுள்ளார். இதனையடுத்து உமாசங்கர் தனது தாய் விஜயலெட்சுமி (73) யுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே உமா சங்கரின் அலுவலகத்தில் பணிபுரிபவர்களும், அவரது நண்பர்களும் உமா சங்கரை பல முறை போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் நெடுநேரமாகியும் உமா ஷங்கர் போனை எடுக்க வில்லை என்று தெரிகிறது. ஒரு கட்டத்தில் போன் ஸ்விட்ச் ஆஃப் என்றும் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உமா சங்கரின் நண்பர்கள் இது குறித்து கரிமேடு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் நேரில் சென்று பார்த்தபோது வீட்டுக்கதவு திறக்கப்படாமலே இருந்துள்ளது.இதனையடுத்து கதவை உடைத்துசென்று அறையில் பார்த்தபோது உமாசங்கர் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகிய இருவரும் விஷம் அருந்திய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.
உடல் அழுகிவிடக்கூடாது என்பதற்காக அறை முழுவதிலும் ஏசியை ஓடவிட்டபடி விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களுடன் சோதனைக்கு செய்தனர். அதில் இவர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர் சடலங்களை உடற்கூராய்விற்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உமா ஷங்கருக்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டதும், குடும்ப பிரச்சினையால் உமா சங்கர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதும் தெரியவந்துள்ளது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கரிமேடு் காவல்துறையினர் ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக தற்கொலையா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் தாயும் மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
டாபிக்ஸ்