ADMK Madurai Manadu: மதுரையில் ஈபிஎஸ் போஸ்டர்கள் கிழிப்பு
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்ட பின் மதுரையில் நடக்கும் முதல் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
மதுரை: மதுரை மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் இன்று(ஆக.20) அதிமுக எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக தொண்டர்கள், நேற்றே தூங்கா நகரமான மதுரையை நோக்கி படையெடுத்தனர். மாநாட்டில் பங்கேற்க, எடப்பாடி பழனிசாமி நேற்று இரவே மதுரை வந்தடைந்தார்.
இந்நிலையில் இன்று காலை 8:45 மணிக்கு சுமார் 51 அடி உயர கொடிக்கம்பத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பிரமாண்ட கொடியை ஏற்றினார். அதிமுக தொடங்கி, 51 ஆண்டுகள் நிறைவு ஆனதைத் தொடர்ந்து, இந்த 51 அடி உயர கட்சிக்கொடி ஏற்றப்பட்டுள்ளதாக, அதிமுகவினர் தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றும்போது, 600 கிலோ பூக்கள் ஹெலிகாப்டர் மூலம் வான்வெளியில் இருந்து தூவப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஜெயலலிதா பேரவை சார்பில், எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக, 3000 இளைஞர்கள் அங்கு குழுமி வரவேற்றனர்.
இந்நிலையில் அங்கங்கு சில அசம்பாவித சம்பவங்களும் மதுரையில் நடக்கத் தொடங்கியுள்ளன. அதிமுக மாநாடு நடைபெறும் மண்டேலா நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒட்டபட்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் படங்கள் நிறைந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டபின் நடக்கும் முதல் அதிமுக மாநாடு இது என்பதால், அவரது எதிரணியாக கருதப்படும் டிடிவி தினகரன் - ஓபிஎஸ் அணியினர் இந்த செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என அதிமுகவினர் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், உற்சாகம் குறையாமல் அதிமுக எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது.
டாபிக்ஸ்