EPS பொதுச்செயலாளராக தடையில்லை! OPSக்கு பின்னடைவு! நீதிமன்றம் அதிரடி
EPS Vs OPS: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை மற்றும் பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை கோரும் ஓபிஎஸ் தரப்பின் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என கடந்த மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி எம்.எல்.ஏக்கள் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இரு தரப்பு வாதங்களும் கடந்த 22ஆம் தேதி நிறைவடந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிக் குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கி உள்ளார்.
அதில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை மற்றும் பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை கோரும் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதான வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ் மகன் உசேன் ஆகியோருக்கு அவசாகம் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.