Crime News: அரளி விதைய அரச்சுக்குடிச்சு ஆயுதப்படை போலீஸ் தற்கொலை
திருப்பூர் ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்தவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பூர் போலிசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவருடைய மகன் ஹரிகிருஷ்ணன் (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணப்பிரியா (26) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் ஹரிகிருஷ்ணன் மனைவி கிருஷ்ணபிரியாவுடன் திருப்பூர் சாமுண்டிபுரம் சிவசக்தி நகரில் வசித்து வந்தார். ஹரிகிருஷ்ணன் திருப்பூர் மாநகர காவல்துறையில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் வீட்டில் ஓய்வில் இருந்த ஹரிகிருஷ்ணன் நேற்றுமுன்தினம் மதியம் 12 மணியளவில் வீட்டில் திடீரென மனைவி கிருஷ்ணபிரியாவை வீட்டிற்குள் வைத்து வெளிப்புறமாக பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் மாலை 4 மணிக்கு மனைவியின் செல்போனுக்கு அழைத்த ஹரிகிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறினார். இதன் பின்னர் அவருடைய செல்போன் டவர் கிடைக்கவில்லை. இதனால் பதறிப்போன கிருஷ்ணபிரியா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இதையடுத்து அவர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரி கிருஷ்ணனை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் வெங்கமேடு வலையம்பாளையம் குட்டை அருகே வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல்தெரிவித்தனர். எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு பிணமாக கிடப்பது ஹரிகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது.
அவரது உடல் அருகே மது பாட்டில் மற்றும் அரளி விதைகள் கிடந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஹரிகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ஹரிகிருஷ்ணன் அடிக்கடி தற்கொலை செய்துகொள்ள போவதாகவும், ஏற்கனவே ஓரிருமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் மனைவியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறிய அவர் அரளி விதையை அரைத்து மதுவுடன் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து, திருமுருகன் பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பூரில் போலீஸ்காரரே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாபிக்ஸ்