MK Stalin Vs BJP: ’திமுக ஒரு பனங்காட்டு நரி’ ஐ.டி ரெய்டுக்கு அஞ்சமாட்டோம் என ஸ்டாலின் ஆவேசம்!
”தேசிய அளவில் திராவிட மாடல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளது. தெற்கில் இருந்து ஒலிக்கும் இந்த குரலை வடக்கில் இருக்கும் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, தங்களிடம் உள்ள ஏவல் அமைப்புகளை எல்லாம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்”
நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், கழகத்தின் செயல்வீரர்களான நீங்கள் கழகத்தின் திட்டங்களை முழுமையாக அறிந்து வைத்திருக்க வேண்டும். சமூகவலைத்தளங்களில் கணக்கு இல்லாத தொண்டர்கள் உடனடியாக கணக்கை தொடங்க வேண்டும். நாம் செய்திகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். எதிர் முகாமில் திட்டமிட்டு செய்யும் பொய் செய்திகளை நாம் முடக்க வேண்டும்.
ட்ரெண்டிங் செய்திகள்
தாய் கழகத்தில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு துணை அமைப்புகளில் வாய்ப்புகளை வழங்க வேண்டும். இளைஞர்களை கழகத்தை நோக்கி ஈர்க்க கணிசமான பொறுப்பு வழங்க வேண்டும். கழகத்தினரை மகிழ்ச்சியோடு நீங்கள் வைத்திருக்க வேண்டும். அமைச்சர்களை சந்திக்கும் போதெல்லாம் நான் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு பகுதி, ஒன்றிய, கிளை செயலாளர்களும் தொண்டர்களை கவனித்து குறையை தீர்த்து வைக்க வேண்டும்; குறையை தீர்த்து வைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை காது கொடுத்தாவது கேட்க வேண்டும். ஒருவேளை முயற்சி தோல்வி அடைந்தாலும் கூட முயற்சி செய்ததை அவர்களிடம் கூறுங்கள்.
ஒவ்வொரு கழகத் தொண்டனும் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும். எதிரிகள் நமக்கு சூழ்ச்சி செய்வார்கள். எல்லாவற்றையும் நாம் எதிர்கொள்வோம். தேசிய அளவில் திராவிட மாடல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளது. தெற்கில் இருந்து ஒலிக்கும் இந்த குரலை வடக்கில் இருக்கும் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, தங்களிடம் உள்ள ஏவல் அமைப்புகளை எல்லாம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.
திமுக ஒரு பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம், அதைத்தான் நான் சொல்கிறேன், யார் வந்தாலும் இந்த ஸ்டாலினும் அஞ்சப்போவதில்லை, திமுகவும் அஞ்சப்போவதில்லை. மறைந்த வீரபாண்டியார் போல திமுகவுக்கு எண்ணெற்ற தொண்டர்கள் உள்ளார்கள்.
கழகம் வலுவோடு எதிர்த்து நின்றால் எந்த கொம்பனாலும் நம்மை அசைத்துக்கூட பார்க்க முடியாது. நம்மை எல்லாம் ஆளாக்கிய கலைஞரின் நூற்றாண்டு விழா, இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் வென்று காட்ட வேண்டிய நாடாளுமன்ற தேர்தல் திருவிழா ஆகிய இரண்டு கொண்டாட்டங்களின் செயல்வீரர்களாக இன்று முதல் செயல்படத்தொடங்குங்கள். நாடும் நமதே நாளையும் நமதே நன்றி வணக்கம் என ஸ்டாலின் பேசினார்.