Pudukottai: வேங்கை வயல் விவகாரம் - உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் சிபிசிஐடி விசாரணை
Human Feces in water Tank: வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் கிராமத்தை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் 8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனிதகழிவு கிடந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய மண்டல ஐஜி கார்த்திக்கேயன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கண்டறிய வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 35 சிபிசிஐடி போலீசார் கடந்த 16ஆம் தேதி விசாரணையை தொடங்கினர். இதுவரை கிராம மக்கள் உள்பட 90 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதி முத்தையா, முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் உள்பட 8 பேர் விசாரணைக்காக திருச்சி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.