Annamalai: திமுக ஊழல் செய்திருப்பதாக அவர்களின் அமைச்சரே கூறியுள்ளார் - அண்ணாமலை பேச்சு
திமுக ரூ. 30 ஆயிரம் கோடி வரை ஊழல் செய்திருப்பதாக அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனே கூறியுள்ளதாக கொடைக்கானலில் என் மண் என் மக்கள் சுற்றுப்பயணத்தின்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் என் மண் என் மக்கள் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலை பிரதேசமான கொடைக்கானல் சென்றார். அங்குள்ள நாயுடுபுரம் விநாயகர் கோயில் பகுதியில் இருந்து பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாக பேரணியாக சென்ற அவர், மூஞ்சிக்கல் வந்தடைந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
பின்னர் அண்ணாமல் தனது பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு பேசியதாவது:
"உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய மிகப் பெரிய இடமாக கொடைக்கானல் உள்ளது. ஆனால் இங்கு சுற்றுலா வருபவர்கள் முகம் சுளிக்கும் அளவில் அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படாமல் உள்ளது.
முறையான கார் பார்க்கிங் வசதிகள் இல்லை. சாலை வசதிகளும் மேம்படுத்தப்படாமல் உள்ளது. சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் நெடுஞ்சாலைகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. தேர்தலுக்கு முன்பு மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வந்தார். அப்போது யாருக்கும் தெரியாமல் பூம்பாறை முருகனை தரிசித்தார் என்பது இங்கிருப்பவர்களுக்கு தெரியும்.
திருட்டுதனமாக பூம்பாறை முருகனை தரிசித்த அவர், சனாதனத்தை வேறருப்பேன் என சொல்வது எப்படி நியாயமாகும். முதலமைச்சராக பதவியேற்றதும் கொடைக்கானலில் பல்நோக்கு மருத்துவமனை, பல அடுக்க கார் வசதி, ரோப் கார் சேவை, ஆண்கள் அரசு கல்லூரி போன்ற திட்டங்களை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை எந்வொரு திட்டத்தையும் நிறைவேற்றியதாக தெரியவில்லை.
கொடைக்கானல் மலைப்பூண்டு புவிசார் குறியீடு வழங்கியது மத்திய அரசுதான். பிரதமர் மோடி ஜி20 மாநாட்டில் இந்தியாவுக்கு தேவை என்ன என்பதை மையப்படுத்தி, உலக நாடுகளின் தலைவர்களை வரவழைத்து மிக சிறப்பாக மாநாட்டை நடத்தினார்.
மத்தியில் பாஜவை சேர்ந்த 78 அமைச்சர்கள் இருந்தும், அவர்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இந்திய அளவில் ஊழல் செய்வது என்பதை கற்றுக்கொடுத்தவர் லாலு பிரசாத் யாதவ். விஞ்ஞான ரீதியாக ஊழல் எப்படி செய்வது என்பதை திமுக சொல்லி கொடுத்தது.
தமிழ்நாட்டை ஆள தகுதி இல்லாதவர் மு.க. ஸ்டாலின். அவர் தனது மகன், மருமகனுக்காக மட்டும் கட்சி நடத்துகிறார். இவர் இந்தியா கோட்டைக்கு சென்று என்ன செய்ய போகிறார். தமிழ்நாடு சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. நாள்தோறும் ஏதாவதொரு அமைச்சர் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது.
ஊழல் செய்து கொள்ளையடிப்பதற்காகவே தமிழ்நாட்டில் ரூ. 7 லட்சத்து 63 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. இதனால் ஒவ்வொரு தனி மனிதன் தலையிலும் தனி நபர் கடன் சுமத்தப்பட்டுள்ளது. ரூ. 30 ஆயிரம் கோடி ஊழல் செய்யப்பட்டிருப்பதாக திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியகராஜன் கூறியுள்ளார்.
சனாதனம் என்பது அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து வாழ்வது. எல்லா காலத்திலும் நிலைத்து நிற்பது. சனாதனத்துக்கு முடிவும் இல்லை, தொடக்கமும் இல்லை.
ஆங்கிலேயர்களும், திமுகவினரும் 70 ஆண்டுகளாக பல்வேறு பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் பாஜக ஆட்சியில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மகளிருக்கான கடன் திட்டங்கள் பல்வேறு வகைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. வீட்டு கடன், தொழில் கடன் என பல லட்சம் பேர் பயன்படும் விதமாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 எம்பிக்களை வென்று பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி செய்வார்"
இவ்வாறு அவர் பேசினார்.
டாபிக்ஸ்