Thirumavalavan: ’பாஜக புகுந்து விளையாட எல்லா ஏற்பாடுகளையும் அதிமுக செய்கிறது’ விளாசும் திருமா!
“Thirumavalavan: தமிழ்நாட்டில் பாஜகவுக்கு காலூன்ற முடியவில்லை என்ற ஆதங்கமும், ஆத்திரமும் இருக்கிறது”
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னார் கோயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை இந்திய ஒன்றிய அர அரசு தர வேண்டும்.
ட்ரெண்டிங் செய்திகள்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈவிஎம் இயந்திரங்களை கொண்டு வாக்குப்பதிவு நடத்துவது ஏற்புடையது அல்ல; வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்கு அளித்து இருக்கிறோம் என்பதற்கு வெளிப்படை தன்மை இல்லை. ஆகவே மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இது பற்றி ஈவிஎம் இயந்திரம் கூடாது என்ற தீர்மானம் டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வரும் ஜனவரி 26ஆம் தேதி அன்று வெல்லும் ஜனநாயகம் மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜின கார்கே மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இந்த மாநாடு இந்தியா கூட்டணியின் வெற்றிக்கான அச்சாரமாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் முதல் புள்ளியாகவும் அமையும்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு காலூன்ற முடியவில்லை என்ற ஆதங்கமும், ஆத்திரமும் இருக்கிறது. திமுக மீதான நம்பிக்கையை தகர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் பாஜகவினர் பேசியும், செயல்பட்டும் வருகிறார்கள். அதிமுக எதிர்க்கட்சி அல்ல; பாஜகதான் எதிர்க்கட்சி என வலிந்து காட்ட முயற்சி செய்கிறார்கள். திமுகவை பலவீனப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் பாஜகவினர் செய்து வருகின்றனர்.
பாஜக புகுந்து விளையாட எல்லா ஏற்பாடுகளையும் அதிமுக செய்து வருகிறது. எதிர்க்கட்சியாக தனது பணிகளை அதிமுக செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.