TN Water Bodies : தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் 8,366 நீர் நிலைகள் - மத்திய நீர் வள அமைச்சகம் அதிர்ச்சி தகவல்
TN Water Bodies and Encrochment data : அண்மையில் மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,போதிய நீர்வளம் இல்லாத தமிழகத்தில் தான் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு, இந்தியாவிலேயே மிக அதிகமாக இருக்கிறது எனும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியாவில், 38,496 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 8,366 நீர்நிலைகள் அதாவது 22 சதவீதம் ஆக்கிரமிப்பில் உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழகத்தில் 1,06,957 நீர்நிலைகள் (ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், நீர்தேக்கங்கள் உள்ளிட்ட தண்ணீர் சேமிப்பு இடங்கள்) உள்ளன. இந்திய அளவில் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு 1.6 சதவீதம் என்று உள்ளது. தமிழகத்திலோ அது 7.8 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 2,805 குளங்கள்,3,565 கண்மாய்கள்,1,458 ஏரிகள், 5 நீர்தேக்கங்கள், 69 அணைகள் (தடுப்பணைகள் உட்பட) இவைகளில் 4,933 நீர்நிலைகளில், 25 சதவீதத்துக்கும் கீழ் ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகள் - 2,596, 25 முதல் 75 சதவீத ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகள் - 1,328, 75 சதவீதத்துக்கும் மேல் ஆக்கிரமிப்பில் உள்ள நீர் நிலைகள் - 1,009. ஆக்கிரமிப்புகளில் பெரும்பாலும் கட்டடங்களும், விவசாய பயன்பாட்டு நிலங்களும் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 92.9 சதவீத நீர் நிலைகள் கிராமப்புறங்களில் உள்ளன.
56.8 சதவீதம் நீர்நிலைகள் வெள்ள பாதிப்பு வரும் பகுதிகளிலும், 34.3 சதவீதம் நீர்நிலைகள் வறட்சி ஏற்படும் பகுதிகளிலும்,8.9 சதவீதம் நீர்நிலைகள் பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும் உள்ளது. 35.8 சதவீத வயல்கள் நீர் நிலைகள் மூலம் நீர் பாசன வசதி பெறுகின்றன. 53.1 சதவீத நீர் நிலைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மற்றவை வறண்டு போயும், வண்டல் மண் படிந்தும், உப்புத்தன்மை ஊடுறுவியும், மீட்டெடுக்க முடியாத பாதிப்பிற்கும் உள்ளாகியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் 2007ம் ஆண்டு குளங்கள்,கண்மாய்களில் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், ஆக்கிரமிப்பு இருந்தால் விரைந்து அதை வெளியேற்றவும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை நடைமுறையில் உள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூட உலகனேரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதை நீதியரசர்கள் சிலரே வேதனையுடன் பதிவிட்டுள்ளனர். நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருவள்ளுவரின், வள்ளுவர் கோட்டம் கூட நீர் நிலையை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 409 இடங்களில் கழிவுநீர், உரிய முறையில் சுத்திகரிக்கப்படாமல் நேராக நீர்நிலைகளில் கலப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் தாங்கு நிலை பயன்பாடு என்பவைக்கான ராம்சார் குறியீடு பெற்ற பள்ளிக்கரணை பகுதியிலேயே ஆக்கிரமிப்புகள் உள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைய இருக்கும் 4,791 ஏக்கரில் 2,605 ஏக்கர் ஈரநிலமாக இருப்பதும், 85 ஏரிகளை நிரப்பி, 43 கிமீ பயணிக்கும் கம்பன் கால்வாயில் நீர்செல்லும் பாதை பெருமளவு தடுக்கப்படும் என இருப்பதும், 955 ஏக்கரில் ஏரிகள், குளங்கள், சிறு நீர் நிலைகள் இருப்பதும் உறுதியான பிறகும், அந்த பகுதியைச் சேர்ந்த 13 கிராம மக்கள் மற்றும் பஞ்சாயத்துகள் விமான நிலையம் தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றியும், விவசாய நிலங்கள், நீர் நிலைகள் அதிகம் இல்லாத திருப்போரூர் அருகில் விமானநிலையம் அமைக்கலாம் என மாற்றுத் திட்டம் உள்ள நிலையிலும், அனைதுது தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதியாக இருப்பது நீர்நிலைகளைக் காக்க அரசுகளே தவறுவதை காட்டுவதாகத்தான் உள்ளது.
ஏற்கனவே நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் தமிழகம் முதலிடத்தில் இருக்கும்போது, இனியாவது (பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட தெளிவான மாற்று இருக்கும் போது) நீர்நிலைகள் ஆக்கிரப்பை தமிழக அரசு குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாபிக்ஸ்